எழுக தமிழ்’ எழுச்சி பேரணியில் அனைவரும் ஒற்றுமையாக அணித்திரள்வோம்! - டெனிஸ்வரன் அழைப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளை இலங்கை அரசிற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணியில் அனைவரும் ஒற்றுமையாக அணித்திரள்வோம் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாளை (சனிக்கிழமை) ‘எழுக தமிழ்’ பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு வடக்கின் சகல கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள், நலன்புரி சங்கங்கள் அனைவரும் பூரண ஆதரவு வழங்கி எமது உரிமைகளுக்கு உயிரூட்டம் கொடுக்க வேண்டும்.
சிறையில் வாடும் எம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைபெறவும், கடந்த யுத்த காலத்தின்போது இராணுவத்தால் அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்கள் விடிவிக்கப்படவும், எமது தமிழினமும் சகல விடயங்களிலும் சமமான அந்தஸ்துள்ள இனமாக மதிக்கப்படவும், காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளது நிலை குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஓர் தெளிவான முடிவை பெறுவதற்கும், எமது தமிழ் பேசும் மக்கள் சகல உரிமைகளையும் பெற்றுக்கொள்ளவும், கடந்த கால எமது உயிர் இழப்புக்களுக்கு அர்த்தம் தேடவும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆதாரமாக அமையும்.
எனவே தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தமிழர்களாகிய எமது தலையாய கடமை என்பதை உணர்ந்து அனைவரும் இப்பேரணிக்கு ஆதரவளிப்போமாக எனவும் குறிப்பிட்டார்.