Breaking News

வவுனியாவில் இன்று விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டம்- பொது பலசேனா ஏற்பாடு



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக பொது பலசேனா அறிவித்துள்ளது.

எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

போருக்குப் பின்னர் அனைவரும் அமைதியாக வாழ்வதற்காக காணப்படும் சூழலைக் குழப்பும் வகையில் செயற்படும் விக்னேஸ்வரனுக்கு எதிராகவே தாம் போராட்டம் நடத்தவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் வாழ முடியாது என விக்னேஸ்வரன் கூறுகிறார். பதிலுக்கு கொழும்பில் தமிழர்கள் வாழ முடியாது எனக் கூறமுடியுமா?

அமைதியான சூழ்நிலையில் சிங்கள மக்களை உசுப்பிவிடும் வகையிலான வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.