Breaking News

தமிழீழ தேசியத் தலைவர் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்



தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் இல்லாதவாறு திருப்பு முனையினை ஏற்படுத்திய தமிழீழ தேசியத் தலைவர் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள். 

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமானது தொடக்ககாலத்தில் கொரில்லா போராட்டமாக காணப்பட்டு, அதன் வளர்ச்சிப் படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபு வழி போராட்டமாக வளர்ச்சி கண்டு, பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலமாக காணப்பட்டது.

அதில் 2007ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22ஆம் நாள் விடுதலைப் புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படி கல்லான தாக்குதலாக, சிங்கள படையின் குகை என்று கூறப்படும் வான்படை மற்றும் தரைப் படையினை கொண்ட அனுராதபுரம் வான் படைத்தளத்தில் தரை வழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்தது சுட்டிக் காட்டப்படுகின்றது. இதன் போது, இலங்கை வான் படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான் கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேதத்தை ஏற்படுத்தி, இலங்கை படைக்கு பின்னடைவினை ஏற்படுத்திய வீர வரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடி வழி காட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவருடன் உணவருந்தி, புகைப்படம் எடுத்துவிட்டு, விடைபெற்று, தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப் பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்து சென்று, அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று, அங்கு தரித்து நின்ற வான் கலங்கள் அனைத்திற்கும் தீ மூட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்ற நாளாகும்.

தமிழீழத் தேசியத் தலைவரால் பெயர் சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கையான இந்த எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுர வான் படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்ததுடன் சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப் புலிகளால் சூட்டு விழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.