Breaking News

உயிரை மாய்த்த புலனாய்வு அதிகாரி லசந்த கொலை நடந்த போது வீட்டில் இருந்தமை அம்பலம்



சண்டே லீடர் ஆசிரியரை தாமே சுட்டுக் கொன்றதாக கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி அந்தச் சமயத்தில் தனது வீட்டிலேயே இருந்தார் என்று உறுதிப்பட்டுள்ளது.

சார்ஜன்ட் மேஜர் இலந்தரிகே எதிரிசிங்க ஜெயமான்ன என்ற முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி தாமே லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்ததாகவும், இந்தக் கொலை தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது நண்பரான இராணுவப் புலனாய்வு அதிகாரி சார்ஜன்ட் மேஜர் மலிந்த உடலகம அப்பாவி என்றும் அவரை விடுவிக்குமாறும கடிதம் எழுதி வைத்து விட்டு அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.

இவரது தொலைபேசிப் பதிவுகளை ஆராய்ந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் 2009 ஆம் ஆண்டு லசந்த விக்கிரமதுங்க படுகொலை இடம்பெற்ற நேரத்தில், அவர் கேகாலையில் உள்ள தனது வீட்டிலேயே இருந்ததாக கண்டறிந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த புலனாய்வு அதிகாரி எழுதி வைத்த கடிதம் உண்மையானதா- அவரது மரணத்துக்குப் பின்னால் வேறு யாரேனும் இருந்தார்களா என்று இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன.