Breaking News

வடமாகாணசபைக்குள் மொத்தம் எத்தனை அணிகள் ?

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை முதலமைச்சர் ஆதரவு அணி மற்றும் சுமந்திரன் ஆதரவு அணியென பிளவுபட்டுள்ள நிலையினில் மறுபுறம் நிர்வாக கட்டமைப்பும் பிரதம செயலாளர் பத்திநாதர் பிரிவு ஆளுநர் செயலாளர் இளங்கோவன் பிரிவென பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


நீண்ட காலமாக வடமாகாணசபையினில் பணியாற்றி வந்திருந்த தற்போதைய ஆளுநர் அலுவலக செயலாளர் இளங்கோவன் பிரதம செயலாளர் பதவி தனக்கே கிட்டுமென காத்திருந்த நிலையினில் அது அரசியல் பின்னணியினில் மொனராகலையினில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்திருந்த பத்திநாதரிற்கு கிட்டியிருந்தது.

முல்லைதீவு மாவட்ட செயலாளராக இருந்த பத்திநாதர், அமைச்சராக இருந்த றிசாத்தின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததையடுத்து மொனராகலைக்கு பழிவாங்கலாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். திறமையான நிர்வாக அதிகாரியாக அடையாளப்படுத்தப்பட்ட பத்திநாதர் முதலமைச்சருடன் முரண்பட்டு கொண்டிருந்த முன்னாள் பிரதம செயலாளர் விஜயலட்சுமியின் இடத்திற்கு நியமனம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அக்கதிரைக்கு காத்திருந்த தற்போதைய ஆளுநர் அலுவலக செயலாளர் இளங்கோவன் பிரதம செயலாளர் பதவிக்காக காத்திருந்த நிலையில் ஏமாற்றத்திற்குள்ளாகியிருந்தார்.

இதனை பயன்படுத்தி வடமாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் இரு தரப்புமாக குழுக்களாக போட்டிபோட்டு முட்டி மோதிக்கொண்டிருப்பதாக முதலமைச்சரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருப்திகரமான சேவையில்லையென குற்றஞ்சாட்டி தனது செயலாளராக இருந்த கேதீஸ்வரனை இடமாற்றம் செய்துள்ள முதலமைச்சர் தற்போது ஏற்பட்டுள்ள நிர்வாக முரண்பாடுகளை சீர் செய்ய அதிகாரிகள் மட்டத்தில் இடமாற்றங்களை வழங்க முற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.