வடக்கு-கிழக்கை இணைக்க முடியாது - மஹிந்த சூளுரை
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமானால் தமிழரின் பூர்வீகத் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்து தமிழ் மக்களின் சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலான சமஷ்டி ஆட்சிமுறை ஊடாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என தமிழர் தரப்பினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள நெலும்பொக்குன என்ற தாமரைத்தடாகம் அரங்கிற்கு அருகிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கை அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பை அடுத்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மீண்டும் தமது தமிழீழக் கனவை அடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் முயல்வதாக குற்றம்சாட்டினார்.
எனினும் வடக்கு, கிழக்கு இணைப்பை தான் விரும்பவில்லை என்றும் கூறிய அவர், அதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார்.
வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு முஸ்லீம் கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நிலையிலேயே மஹிந்த இந்தக் கருத்தை கூறியிருக்கின்றார்.
அதேவேளை கூட்டு எதிர்கட்சியினர் உருவாக்கவுள்ள புதிய அரசியல் அமைப்பிற்கு முஸ்லீம் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம் அமைப்பொன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அளுத்கம தாக்குதல் உட்பட முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்முறைகள் காரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அணியினர் தமிழ், முஸ்லீம் மக்களின் ஆதரவை திரட்டிக்கொள்ள தீர்மானித்து செயற்பட்டு வருவதாகவும் கூறும் அரசியல் ஆய்வாளர்கள், அதன் வெளிப்பாடே மஹிந்தவின் இந்தக் கருத்துக்கள் என்றும் கூறியுள்ளனர்.
குறிப்பாக இதன் ஒரு முயற்சியாகவே கடந்த திங்கள் அன்று கொழும்பிலிருந்து இயங்கும் தமிழ் ஊடகங்களை பிரத்தியேகமாக சந்தித்திருந்த மஹிந்த ராஜபக்ச, தமிழ் மக்கள் தொடர்பில் தனது கரிசணையை வெளியிட்டிருந்தார்.
இதன்போது தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போல் இராணுவ முகாம்களை அகற்றவில்லை என்று குறிப்பிட்டதுடன், போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள அகதிகள் முகாம்களையும் மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மஹிந்த தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே முஸ்லீம் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் முஸ்லீம் மக்களின் கரிசணையாக இருக்கும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக மஹிந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.