Breaking News

சம்பூர் மக்களின் காணிகள் மீளக் கையளிக்கப்பட மாட்டாது - அரசாங்கம்



சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள போதிலும் இந்தத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட 500 ஏக்கர் காணி உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கப்பட மாட்டாது என்று மின்வலு அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர்களுக்கு மாற்றுக் காணிகளே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சம்பூர் மக்களின் காணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

குறித்த திட்டத்திற்காக 500 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டதோடு அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கிளிவெட்டி அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களது சொந்தக் காணிகள் வழங்கப்படுவது தொடர்பாக பிமல் ரத்நாயக்க வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அஜித் பி.பெரேரா, சம்பூர் திட்டம் கைவிடப்பட்டுள்ள போதிலும், அங்கு அமைக்கப்பட்ட அலுவலகம் இன்னும் கலைக்கப்படவில்லை என்று கூறினார்.

சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்தமைக்கு மின்சார சபையோ அல்லது ஸ்ரீலங்கா அரசாங்கமோ காரணம் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், அவர்கள் கடந்தகால யுத்தம் காரணமாகவே இடம்பெயர்ந்திருப்பதாகவும் கூறினார்.

காணிகளை இழந்த பெருமளவிலானவர்களுக்கு மாற்றுக்காணி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை மாற்றுக்காணி பெற்றிராதவர்கள் மின்வலு அமைச்சு அல்லது மீள்குடியேற்ற அமைச்சில் தெரியப்படுத்தினால் அவர்களுக்கான மாற்றுக்காணி வழங்குவது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.