யாழ் பொலிஸ் நிலையத்தை சுற்றி கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் கலகமடக்கும் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் யாழ் நகரப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் மாணவர்களின் கொலையால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளதால், கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தைச் சூழ பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதேவேளை, கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் என்ற மாணவனின் இறுதிச் சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதுடன், அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷ்னின் இறுதிச் சடங்குகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களான என்ற 24 வயதுடைய மாணவனும், 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் என்ற 23 வயதுடைய மாணவனும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் உயிரிழந்திருந்தனர்.
கந்தரோடையில் இருந்து யாழ்ப்பாணம் - பல்கலைக்கழக விடுதிக்கு, சென்று கொண்டிருந்த போதே, கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் பிரேத பரிசோதனைக்காக மாணவர்களினதும் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுலக்சனின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதை சட்ட மருத்துவ அதிகாரி தனக்குக் காட்டியதாக சுலக்சனின் தந்தையார் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் மாணவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மாணவர்களின் கொலைக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் நேற்று கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரித்ததுடன், உயிரிழந்த மாணவர்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளையும் தொங்கவிட்டனர்.
இந்த நிலையில் யாழ். பிரதான நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்கரன், நேற்று மாலை ஆறு மணியளவில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களையும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இருவரையும் அழைத்து, பிரேத பரிசோதனையின் போது ஒருவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாக தெரிவித்ததுடன், இது ஒரு கொலை என கூறியுள்ளார்.
அத்துடன் இந்த கொலை தொடர்பில் புலன்விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்த நீதவான், மாணவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.