Breaking News

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: நல்லாட்சியும் இழுத்தடிப்பு



அரசியல் கைதிகளை விடுவிப்பதாக உறுதியளித்த தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கமும் அவர்களை விடுவிக்காது இழுத்தடிப்புச் செய்து வருவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அத்துடன், அரசியல் கைதி விவகாரத்தில் இழுத்தடிப்பை நிறுத்தி நல்லாட்சி அரசாங்கம், சிறைச்சாலைகளில் வாடும் 96 தமிழ் அரசியல் கைதிகளையும் எந்தவித தாமதமும் இன்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நீர்கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) கையெழுத்து போராட்டம் இடம்பெறவுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் மாலை 4 மணிக்கு குறித்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த கையெழுத்து போராட்டம், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.