Breaking News

வித்தியாவின் கொலை சந்தேக நபர்கள் ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவத்துடன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வவுனியா சிறைச்சாலையிலுள்ள ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா சிறைச்சாலை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிறைச்சாலைக்குள் ஏனைய கைதிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு ஆதிக்கம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறைக்குச் செல்லும் கைதிகளை தாம் சொல்வதைக் கேட்டு செய்ய வேண்டும் என பணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாதவர்களை மிரட்டுவதாகவும், தமக்கு கட்டுப்படாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் சிறைச்சாலை காவலர்களுக்கு தெரியப்படுத்த முயல்பவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் இதுகுறித்து மௌனமாக இருப்பதாக வவுனியா சிறைச்சாலையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.