நாட்டைப் பிரித்தால் தற்கொலை செய்வோம்:பிக்குகள் எச்சரிக்கை
சமஷ்டி என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் ஸ்ரீலங்காவின் நிலைமை எதிர்காலத்தில் பயங்கரமாகிவிடும் என்று தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு நாட்டைப் பிரிப்பதாயின் தங்களது உயிர் பிரிந்த பின்னரே நிகழும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரை சந்திப்பதற்காக கொழும்பிலுள்ள சில பௌத்த பிக்குகள் இன்றைய தினம் முற்பகல் வெலிக்கடை சிறைக்கு விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தைத் தொடர்ந்து குறித்த பிக்குகள் குழுவுக்கு தலைமைதாங்கிய ருக்மலே தம்மகீர்த்தி தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
“சமஷ்டி தீர்வென்பது நாட்டைப் பிளவுபடுத்தாது என்று அவர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த நாட்டைப் பிரிக்கவே முயற்சிக்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்த நாட்டைப் பிரிப்பதற்கே இந்த நாட்டிலுள்ள தலைவர்களும் முயற்சிக்கின்றனர். இருப்பினும் நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இரகசியமாக இந்த முயற்சியை மேற்கொண்டாலும் அரசியலில் இல்லாத அனைத்து மகாநாயகர்களும் விழித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
அனைத்து மகாநாயகர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு பாடம்புகட்டுவோம். எமது உயிரைத் தியாகம் செய்த பின்னரே இந்நாட்டைப் பிரிக்க எவருக்கும் முடியும். மகாநாயகர்களும், இளைய பிக்குகளும் பின்வாங்க மாட்டார்கள். கோரிக்கைகளை முன்வைக்கும் இளைஞர்களை கைது செய்கின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் நடத்தப்படுகிறது. அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றது. இந்த நிலை தொடர்ந்து சென்றால் மிகவும் பயங்கரமான சூழ்நிலையே இந்த நாட்டில் ஏற்படும்” என்று தெரிவித்தார்.
இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்து வரும் யோசனை தொடர்பாக ருக்மலே தம்மகீர்த்தி தேரர் இதன்போது தமது கருத்தை வெளியிட்டார்.
“வடக்கு, கிழக்கு ஒன்றிணைந்து செயற்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த நாட்டில் வாழும் சிங்களம், முஸ்லிம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும். எனினும் இந்த நாட்டைப் பிரிக்கும் செயற்பாட்டிற்கு எதிராகவே நாங்கள் அணிதிரண்டு எதிர்க்கின்றோம்” என்றார்.








