தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தியாகி பொன். சிவகுமாரனின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், ஆகியோரும், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம், எதிர்கட்சி தலைவர் சி. தரவராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து பொது சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிறந்த சிவகுமாரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியை கற்றார்.
அப்போதைய காலப்பகுதியில் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது இதற்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார்.
அத்துடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த சிவக்குமாரன் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 அம் திகதி கோப்பாயில் பொலிஸார் சுற்றிவளைத்த போது கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட முதலாவது நபர் இவராவார்.
இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டது.








