பளை துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: ஒருவர் கைது!
பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான கிருபானந்தமூர்த்தி விஜயரூபன் என்பவரை, அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில் நேற்றிரவு குறித்த இளைஞனின் வீட்டிற்கு சென்று சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்துள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் பளை பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதிகளில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், அப்பகுதியில் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.








