பிரதமரை நீக்கிடவே எதிரணியின் ஆராய்வு.!
பிரதமருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது குறித்து ஆராயும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறுகின்றது.
நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போட்டுள்ள போதிலும் அதனை கைவிடவில்லை. விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமெனக் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் முயற்சியில் கடந்த காலத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கைகள் எடுத்த போதிலும் நாட்டின் அசாதாரண நிலைமைகளை கருத்தில் கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போட்டிருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் தாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கூட்டு எதி ர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,
எமது முயற்சிகள் கைவிடப்படவில்லை.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் நிலையில் எமக்கு சாதகமாகவே அமையும். நாளை (இன்று) கூட்டு எதி ர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் கூடும் இக்கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கலந்துரையாடவுள்ளோம். மேலும் நாட்டில் உள்ள அவசரகால நிலைமைகளை கருத்தில் கொண்டே நாம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போடத் தீர்மானித்தோம்.
ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிட எந்த தீர்மானமும் நாம் எடுக்கவில்லை.
மேலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள சகல கட்சிகளுடனும் நாம் கலந்துரையாடவுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ம.வி.மு., தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பிரதமரை எதிர்க்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் என அனைவரையும் சந்தித்து எமது நிலைப்பாட்டினை கூறுவோம்.
எமக்கு ஆதரவை பெற்றுக்கொள்ள சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில், இந்த நாட்டில் இன்று அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் பாராளுமன்றம் இயங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் பலவீனம் என்னவென்பது தெரிய வந்துள்ளது.
கண்டி இனவாத மோதலின் போது இந்த அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பின் பலவீனம் என்னவென்பது தெரியவந்துள்ளது. இன்று சமூக வலைப்பதிவு தள ங்களை முடக்கியதன் மூலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகள், நகர்வுகளின் உயிரோட்டமில்லாத தன்மை விளங்கியுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருந்தும் எந்த பயனும் இல்லை. ஆகவே பிரதமரை நீக்கி புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும். எமது இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
ஆகவே தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நாம் தீர்மானித்தோம். முதல் தடவை பிரதமர் தப்பித்து விட்டார். ஆனால் தொடர்ந்தும் தப்பிக்க முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.