முதலில் அரசியல் தீர்வு பின்பே அபிவிருத்தி என - முதலமைச்சா்.!
வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளை திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது.
எமது வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப்பணிகள் செயற்படுத்தப்படவேண்டு மென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
வடக்கு, கிழக்கு மாகாண முன்னேற்றப்பணிகள் குறித்து ஆராய்வதற்காக 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நியமித்திருந்தார்.
இச் செயலணி நியமனம் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து ஜனாதிபதிக்கு வட மாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தங்களால் தலைமை தாங்கப்படவிருக்கும் செயலணி பிரதம மந்திரி, 15 கௌ ரவ மத்திய அமைச்சர்கள், வடகிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், வடமாகாண முதலமைச்சராகிய என்னையும், தற்போது வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரையும், இராஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிர தம மந்திரி அடங்கிய மத்திய அமைச்சர்கள் அனைவரதும் அமைச்சுக்களின் செயலாளர்கள்,
வடகிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், இராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், யாழ். பாதுகாப்புப் படையின் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதி, மேலும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
என்னையும் எமது பிரதமசெயலாளரையும் தவிர வடமாகாணத்தை அங்கத்துவம் வகிக்க வேறெவரும் அதில் இல்லை. செயலணியின் செயலாளர் (சிவஞானசோதி) வடமாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மத்திய அரசின் அலுவலர் ஆவார்.
செயலணியின் வட,கிழக்கு பற்றிய முன்னேற்ற செயற்பாடுகள் நாட்டின் ஐக்கியத்தையும் ஒன்றிணைவையும் ஏற்படுத்தி சமமான சமூக பொருளாதார வளர்ச்சியையும் வருமான வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
வட,கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களின் மீளாய்வு உள்ளடங்கிய பல வித பணிகள் குறித்த செயலணிக்கு அடையாளப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
வட,கிழக்கில் நடைபெற்றுவரும் முன்னேற்றப் பணிகள் அனைத்தையும் நடத்துவிக்கும், ஒருங்கிணைக்கும், மேற்பார்வை பார்க்கும் பணி ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
என்னையும் எமது பிரதம செயலாளரையும் இந்த செயலணியினுள் உள்நுழைத்தமைக்காக நான் உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பல மத்திய அமைச்சர்களும் அவர்களின் அமைச்சுச் செயலாளர்களும் இச் செயலணியில் சேர்க்கப்பட்டிருப்பினும் எமது வடமாகாண அமைச்சர்கள் இதில் விடுபட்டுள்ளார்கள்.
எமது அமைச்சர்களின் மற்றைய செயலாளர்களும் விடுபட்டுள்ளார்கள். உங் கள் தேர்வில் இது ஒரு பாரிய தவறாக எனக்குப்படுகின்றது.
வட,கிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது.
அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட வட,கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது. எமது வட,கிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப் பணிகள் செயற்படுத்தப்பட வேண்டும்.
தென்னாபிரிக்காவில் அரசியல் தீர்வு பெற்ற பின்னரே உண்மைக்கும் சமரசத்துக்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
தெற்கானது வட,கிழக்குக்கு இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை செய்திருப்பதாக ஜெனிவாவிலோ வேறெங் குமோ உலக சமுதாயத்திற்கு நாம் எடுத்துக் காட்டினாலும் போர் முடிந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாக வட,கிழக்கு மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சனைகளைத் தொடர்ந்து வந்துள்ள மத்திய அரசாங்கங்கள் தீர்க்கவில்லை என்ற விடயத்தை நாம் மூடிமறைக்க முடியாதிருக்கும்.
ஆகவே எமது மக்கள் தமது அரசியல் உரித்துக்களையும் மனித உரிமைகளை யும் நீங்கள் தரும் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கைவிட்டு விடுவார்கள் என்று எண்ணுவது தவறான செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ளாா்.