Breaking News

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி கடிதம்!

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறிய நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

சூர்யா அறிக்கை குறித்த தனியார் தொலைக்காட்சி செய்தியை சுட்டிக்காட்டி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதத்தை எழுதியுள்ளார். உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யா கூறிய கருத்தானது, நீதிபதிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றதை அவமதிக்கும் வகையில் உள்ளதாக, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார். 

சூர்யாவின் கருத்து, நீதிமன்றத்தின் மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளதாகவும், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாகவும் கூறியுள்ள நீதிபதி, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும் என தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.