Breaking News

`விஜய் சேதுபதியின் மௌனம் நேர்மையல்ல...!'- `800’ திரைப்பட சர்ச்சை குறித்து வ.கௌதமன்


``தமிழின துரோகி முத்தையா முரளிதரன். அவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்தால், அவரும் இனத் துரோகியாகவே பார்க்கப்படுவார்’’ என்கிறார் இயக்குநர் வ.கௌதமன். விஜய் சேதுபதி நடிக்கும், `800' திரைப்படத்துக்கு, உலகத் தமிழர்களின் எதிர்ப்பு வலுத்துவருகிறது. 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை `800' என்ற தலைப்பில், தமிழ்த் திரைப்படமாக்கும் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தில், தமிழரான முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 800 திரைப்படம் 800 திரைப்படம் ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, சிங்கள அரசுக்கு ஆதரவாக தமிழீழப் போராளிகளை விமர்சித்து வெளிப்படையாகப் பேசிவந்தவர் முத்தையா முரளிதரன். 

எனவே, முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் `800' திரைப்படத்துக்கு உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தமிழக அரசியல் கட்சியினரும், தமிழ்த் திரைப்படத்துறையைச் சார்ந்தோரும், 'விஜய் சேதுபதி, 800 படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்' என்று தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்துவருகின்றனர். இந்தநிலையில், ஈழ இனப்படுகொலை சம்பந்தமான பல ஆவணப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநரும், `தமிழ்ப் பேரரசுக் கட்சி'யின் பொதுச்செயலாளருமான வ.கௌதமன், இந்த விவகாரம் குறித்துப் பேசினார். வ.கௌதமன் 

`800 திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் என்ற ஒரு கிரிக்கெட் வீரரின் அழகான வாழ்க்கையைத்தான் படமாக்கப்போகிறோம்; இதில் எந்தவித அரசியலும் இல்லை’ என்று தயாரிப்புத் தரப்பிலிருந்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் வீரரின் அழகான வாழ்க்கையைப் படமாக்கும்போது, கூடவே அந்த வீரர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டுமல்லவா? தமிழினத்தில் பிறந்திருந்தாலும்கூட பச்சைத் துரோகத்தாலான உருவமாக அல்லவா முத்தையா முரளிதரன் இருக்கிறார். 

2009-ல் நடைபெற்ற இறுதிப்போரின்போது, தமிழீழத்தைச் சார்ந்த லட்சக்கணக்கானவர்களைக் கொன்றொழித்தது சிங்களப் பேரினவாத அரசு. கடல்கடந்து நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு ஏற்பட்ட அநீதியைக் கண்டு இங்கிருக்கும் நாமெல்லாம் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது அரற்றினோம். ஆனால், இலங்கையிலிருந்த தமிழர் முத்தையா முரளிதரன், `தீவிரவாதிகள் அழிக்கப்பட்டார்கள்' என்று விடுதலைக்காகப் போராடிய போராளிகளைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருந்தார். 

விஜய் சேதுபதி விஜய் சேதுபதி இப்படிப்பட்ட முத்தையா முரளிதரன் என்கிற ஓர் இனத் துரோகியைக் கதாநாயகனாகச் சித்திரிக்கும் `800' திரைப்படத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கலாமா என்பதுதான் எங்கள் கேள்வி. இது சம்பந்தமாக, நானே விஜய் சேதுபதியிடம் இரண்டு முறை தொலைபேசி வழியாகப் பேசியபோது, `தயவுசெய்து இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம்' எனக் கோரிக்கையும் வைத்துவிட்டேன். 

`விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்... ஆனால்?’ - முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை! ஆனால், `இந்தப் படத்தில் ஓர் இடத்தில்கூட தமிழினத்தை கொச்சைப்படுத்தவில்லை; போராளிகளை அசிங்கப்படுத்தவில்லை. எனவே, இந்தப் படத்தில் நடிப்பதை நான் பெருமையாகத்தான் உணர்கிறேன்’ என்று சொல்லிவிட்டார் விஜய் சேதுபதி. அவர் சொல்வதுபோல், அந்தப் படத்தின் கதையில் இது போன்ற காட்சிகள் இல்லாமல் இருக்கலாம். 

ஆனால், அந்தக் கதையின் நாயகனான முத்தையா முரளிதரனின் உருவமே ஓர் தமிழினத் துரோகத்துக்கான அடையாளம்தான். எனவே, அப்படிப்பட்ட இனத்துரோகியின் வேடத்தில் நடித்தால், 'விஜய் சேதுபதியையும்கூட தமிழினத் துரோகி'யாகத்தான் வரலாறு பார்க்கும். முத்தையா முரளிதரன் முத்தையா முரளிதரன் தமிழர்கள், எதிரிகளைக்கூட மன்னிப்பார்கள்; துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 

அதனால்தான் இப்போது உலகம் முழுக்க இருக்கும் தமிழ்ச் சொந்தங்கள், `விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது’ என்று சொல்லி, எதிர்ப்புக் குரல் எழுப்பிவருகிறார்கள். ஆனால், இவ்வளவு எதிர்ப்புகளுக்குப் பிறகும்கூட, விஜய் சேதுபதி தரப்பிலிருந்து வெளிப்படும் கனத்த மௌனம், நேர்மையானது அல்ல; அது இந்த தமிழினத்துக்கு விஜய் சேதுபதி செய்யும் துரோகமாகவே இருக்கிறது. 

ஏற்கெனவே சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய ஈழப் படுகொலையை, `தீவிரவாத ஒழிப்பு' என்று முத்தையா முரளிதரன் வாயிலிருந்து சொல்லவைத்தது. இப்போது அதே முத்தையா முரளிதரனை `800' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக சித்திரித்து, உலக அரசியல் அரங்கில் தன்னை ஒரு நாயகனாக முன்னிறுத்த ராஜபக்‌சே முயல்கிறார். அதனால்தான் `800' படத்துக்கு வாழ்த்து சொல்கிறார் நமல் ராஜபக்‌சே. '800' திரைப்படத்தில் நடித்தே தீருவது என்பதில் விஜய் சேதுபதி முடிவெடுத்துவிட்டால், நடித்துவிட்டுப்போகட்டும். ஆனால், அந்தப் படம் வெளிவரும்போது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் எதிர்வினை என்பது காத்திரமாக இருக்கும். 

அப்படியொரு நிலைக்கு விஜய் சேதுபதி வித்திட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. ஆக, எம் தமிழினத்தை கொத்துக்குண்டுகளால் கொன்றொழித்த சிங்கள அரசுக்கு உறுதுணையாக நின்ற முத்தையா முரளிதரன் என்ற இனத்துரோகியை, இப்போது அதே சிங்கள அரசின் ரத்தக் கறையை மூடி மறைப்பதற்காக கதாநாயக உருவெடுத்து உலக அரங்கில் உலவவிடும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

இந்த அரசியலெல்லாம் தெரியாதவரா விஜய் சேதுபதி?'' என்கிறார் ஆதங்கத்துடன். ராஜபக்‌சே ராஜபக்‌சே இதையடுத்து, '800' திரைப்படத்துக்கு எதிராக உலகத் தமிழர்கள் முன்வைக்கும் கேள்விகள் மற்றும் `இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது' என அவர்கள் முன்வைத்துவரும் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு விளக்கம் கேட்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தோம். நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறோம். 

அவர் தரப்பு விளக்கத்தை அளிக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் வெளியிடத் தயாராகவே இருகிறோம். விஜய் சேதுபதி மற்றும் '800' திரைப்படத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான யுவராஜிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம்... ``800 திரைப்படத்துக்கு எதிராகக் கருத்துகள் கிளம்பி வந்ததையடுத்து, பட நிறுவனமே இது குறித்துத் தெளிவான விளக்கம் ஒன்றை நேற்றே வெளியிட்டிருக்கிறது. விஜய் சேதுபதி விஜய் சேதுபதி இந்தநிலையில், '800' திரைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பல்வேறு தரப்பிலிருந்து இன்று கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து விஜய் சேதுபதி என்ன முடிவெடுக்கப்போகிறார் என்று எனக்கும் தெரியவில்லை. இது குறித்த முடிவுகளைத் தெரிந்துகொள்ள எப்படியும் இரண்டொரு நாள்கள் ஆகிவிடும்'' என்றார்.

தொடர்புடைய காணொளிகள்