Breaking News

மரக்கடத்தல் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது மரக்கடத்தல் திருடர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! 

இலங்கை தேசிய மரக்கூட்டுத்தாபனம் ஒன்றின் உப ஒப்பந்ததாரராகிய பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கான மரம் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுவரும் குறித்த குழு தமக்கு காப்பரணாக குறித்த நிறுவத்தினையும் மரக்கூட்டுத்தாபனத்தினையும் பயன்படுத்தி வந்திருக்கின்றது. 

நீண்டகாலமாக குறித்த மரக்கடத்தல் தொடர்பில் குமுழமுனை மற்றும் முறிப்பு பகுதி மக்களால் பொறுப்புவாய்ந்த தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. 

அந்தக் குழுவுக்கு தலைமை தாங்கும் நபர் தேக்கு மரத்தினாலான மரவீடு ஒன்றை அமைத்துவருவதாகவும் அதனையாவது வெளியில் கொண்டுவருமாறும் முறிப்பு மற்றும் குமுழமுனை மக்கள் ஊடகவியலாளர்கள் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோரிடம் கோரிக்கைவிடுத்திருகின்றனர் . 

இதனை அடுத்து சற்று முன்னர் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்ப முற்பட்டபோது குறித்த நபரும் அவருடைய கையாட்கள் மூவரும் வாச்சி, கொட்டன் தடிகள், இரும்புக்கம்பிகளால் இருவரையும் கடுமையாகத் தாக்கி பணயக் கைதிகளாக்கியிருக்கின்றனர். 

பின்னர் ஊடகவியலாளர்களின் தொலைபேசி மற்றும் கமெராக்களில் இருந்த காட்சிப் பதிவுகளை அழிக்கவைத்ததுடன், அவர்களிடம் இருந்த தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் இருவரையும் திருடர்கள் என்று தெரிவுக்குமாறு நிர்ப்பந்தித்து விடியோவாகவும் தமது கமெராக்களில் பதிவு செய்திருக்கின்றனர். 

அதன் பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் இருவரும் சென்றிருக்கின்றனர். 

குறித்த தாக்குலாளிகளுக்கு அதிகாரத் தரப்புடன் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்றும் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.