Breaking News

பழங்களை தோலுடன் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

 


பழங்களை தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது, என்கிறார்கள். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும். 

ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசியம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக்களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால்தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். 

மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதிகரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந்து சாப்பிடும்போது, மேற்சொன்ன சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதோடு, ரத்தச் சர்க்கரை உடனே அதிகரிக்கும். கொய்யா பழத்தோலில் சருமத்தைக் காக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் குணம் மாம்பழத் தோலுக்கு உண்டு. 

சப்போட்டா பழத்தோலில் உடலில் காயங்களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப்பொருட்கள் நிரம்பியுள்ளன. உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் குணமும் இவற்றுக்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு மருத்துவரின் யோசனைப்படி அளவோடு சாப்பிடலாம். வாழைப்பழத் தோலில் கால்சியமும் யூரிக் அமிலத்தைச் சமப்படுத்தும் ஆற்றல் உள்ள செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன. வயதானவர்களுக்குக் கால்சியம் குறைவதால் மூட்டுவலி ஏற்படுவது வழக்கம். 

சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தும் இந்தப் பிரச்சினையை உண்டுபண்ணும். இவர்கள் வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்டால், மூட்டுவலி கட்டுப்படும். இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைப்பழத் தோல் சிறிது கசப்புத் தன்மை உடையது. 

நீரிழிவு நோய் இல்லாதவர்கள் வாழைப்பழத் தோலில் சிறிது தேனைத் தடவிச் சாப்பிடலாம். இப்போது விளையும் தக்காளிப் பழத்தில் தோல் தடிமனாக இருப்பதால், பலரும் தோலை எடுத்துவிட்டுச் சமைக்கின்றனர். இது தவறு. தக்காளித் தோலில் வைட்டமின் - ஏ, சி, மற்றும் கால்சியம் சத்துக்கள் மிகுந்துள்ளன. 

எனவே, தக்காளிப் பழத்தைத் தோல் எடுக்காமல் சாப்பிடுவதும் சமைப்பதும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இதுபோல் திராட்சையைத் தோலுடன் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் முழுவதுமாகக் கிடைக்கும். அதே வேளையில் திராட்சையைச் சாறு பிழிந்து குடித்தால், பல சத்துக்கள் குறைந்துவிடும். எனவே, பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது.