தமிழீழ அரசமைப்பு குறித்து ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் ஆய்வு
ஹொங்கொங், ஆகஸ்ட் 20: இலங்கையில் தனியான தமிழீழ அரசை உருவாக்குவதற்கான சட்ட மற்றும் அரசியல் சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஹொங்கொங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகம் (CUHK) புதிய கல்வியியல் ஆய்வொன்றை முன்னெடுக்கிறது.
பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம், பேராசிரியர் அலெக்ஸ் கிரீன் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொள்கிறது. இதற்காக முதுநிலை ஆய்வாளரை (Postdoctoral Researcher) நியமிப்பதற்கான வாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் Transnational Government of Tamil Eelam (TGTE) அமைப்புடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனியான தமிழரசு உருவாக்கம் தொடர்பாக நிலவும் சர்வதேச சட்டம் மற்றும் அரசியல் விவாதங்கள், அத்துடன் புதிய அரசை உருவாக்குவதில் எதிர்கொள்ளக்கூடிய சட்டரீதியான சவால்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் இந்த ஆய்வை தனியான தமிழரசை உருவாக்குவதற்கான ஆதரவு நடவடிக்கையாக வரையறுக்கவில்லை. மாறாக, புதிய அரசை உருவாக்குவதில் காணப்படும் சட்டரீதியான சவால்களை “புறநிலை சார்ந்த கல்வியியல் மதிப்பீடாக” ஆய்வு செய்வதே நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு நடைபெறும் இடமும் அதனுடன் தொடர்புடைய அரசியல் சூழலும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஹொங்கொங் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக உள்ள நிலையில், சீனாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் காணப்படுகின்றன.
இதனால், ஹொங்கொங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தனியான தமிழரசு தொடர்பான சர்வதேச சட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுவது, இலங்கையின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த புதிய விவாதங்களை உருவாக்கக்கூடும் எனக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
பேராசிரியர் அலெக்ஸ் கிரீனின் 2024ஆம் ஆண்டு Cambridge University Press வெளியிட்ட Statehood as Political Community: International Law and the Emergence of New States என்ற ஆய்வுநூலின் சட்டக் கட்டமைப்பையும் இந்தத் திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கில் தனியான தமிழரசை உருவாக்கும் பிரிவினைவாத அரசியல் திட்டத்துடன் தொடர்புபட்ட தமிழீழக் கோரிக்கை, தற்போது சர்வதேச சட்டம், அரசமைப்பு மற்றும் புதிய நாடுகளின் உருவாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கல்வியியல் ஆய்வின் ஒரு பகுதியாக மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.








