Breaking News

பிரபாகரனின் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டது ?


நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் கட்டப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கோயிலை தமிழக அரசு இடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று நள்ளிரவு தாண்டிய வேளை மின்தடையை ஏற்படுத்தி இரகசியமான முறையில் தமிழகப் பொலிசாரால் அகற்றப்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்கு பொய்கை நல்லூரில் கடந்த 4ஆம் தேதி வாயர்வீட்டு வம்சாவழி வகையறாக்கள் மற்றும் கிராமத்தினரால் பேச்சியம்மன்கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டனர். கோயிலின் தெற்கு பகுதியில் தங்களது காவல்தெய்வத்திற்கு இரண்டு குதிரைகளை காவலாக சிமெண்ட் சிலையாக வடிவமைத்திருந்தனர். 

அதில் ஒன்று சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படியும் சிலையாக வடிவமைத்திருந்தனர். "தன் இனத்தையும், மக்களையும் பாதுகாத்தவர்களின் தலைவர்களின் சிலைகளை வடிவமைத்து அவர்களுக்கு வழிபாடு செய்து தாங்கள் அவர்களுக்கு செலுத்தும் நன்றியாக கருதுகிறோம்.

இதனால் எங்களது குலதெய்வமாகி இஷ்ட தெய்வத்துடன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பிரபாகரன் சிலையை வைத்து வழிபடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று கிராமத்தினர் சொல்லி வந்தனர்.

இந்த சிலை இருக்கும் தகவல் கடந்த இரு நாட்கள் சமூகவலைத்தளங்களிலும் இணையங்களிலும் வெளியாகியிருந்திருந்த நிலையில் இச்சிலை அகற்றப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகவல் உளவுத்துறையினரால் மேலிடத்திற்கு போக, நாகை காவல்துறையினர் ஸ்பீடு காட்டினர். அதன்பிறகு நேற்றிரவு 12 மணிக்கு தெற்கு பொய்கை நல்லூருக்கு வந்த காவல்துறையினர், பிரபாகரனின் சிலையை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர். அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பின்னர் காவல்துறையினரின் அதிரடியால் அதனை வடிவமைத்தவரை கொண்டு அகற்றியுள்ளனர். 


இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தெற்கு பொய்கை நல்லூரில் உள்ள ஊர் பெரியவர்கள் யாரும் இப்போது ஊரில் இல்லையாம். காவல்துறையினருக்கு பயந்துபோய் வெளியூருக்கு சென்றுவிட்டார்கள். திருவிழாவை முன்னின்று நடத்திய மாணிக்கம் மற்றும் சிலையை வடிவமைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி