Breaking News

வவுணதீவில் மாற்றுத் திறனாளிகளின் கண்காட்சி நிகழ்வு

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச சபையில் மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.


மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசபை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த நிகழ்வு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், கமிட் மற்றும் கன்டிகப் நிறுவனங்களின் அமுலாக்கலுடன் மண்முனை மேற்கு பிரதேச வாழ்வகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கண்காட்சியினை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வானது, மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளிக்கொணர்வதற்காக முன்னெடுக்கப்பட்டதுடன், கண்காட்சியில் புகைப்படங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் காட்சிப்படுத்தப்பட்டன.

சமவசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதனுடாக இலகுவில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்களுக்கான நிலைத்து நிற்கக்கூடிய வாழ்வாதார மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய வறுமைக் குறைப்பு எனும் செயற்பாட்டிற்கமைவாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, கமிட் நிறுவன திட்ட பணிப்பாளர் கே. காண்டீபன், கன்டிகப் நிறுவன திட்ட முகாமையாளர் ஜி. கிறிஸ்டி மற்றும் வாழ்வின் எழுச்சி முகாமையாளர் எம். மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.