சர்வதேச நிபுணத்துவ பங்களிப்பு பொறிமுறைக்கு வலுச்சேர்க்கும் - சட்டத்தரணி ஜே.சி வெலிஅமுன
உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நிபுணர்கள் பங்கேற் றால் அதனை உரிய முறையில் நம்பகரமாக முன்னெடுக்க முடியும். சர்வதேசசட்டவல்லுனர்கள் இதற்கு முன்னரும் இலங்கையின் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது இலங்கைக்கு புதிய விடயமல்ல. எனினும் இதனை பாராளுமன்றத்தின் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி வெலிஅமுன தெரிவித்தார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவின் சர்வதேச விசாரணை நீதிமன்றத்திற்கு முகங்கொடுத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையை கண்டறிய ஆணைக்குழு, காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம், உள்ளக பொறிமுறை நீதிமன்றம் ஆகியவைகளுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவைப்படுகின்றது. இது குறித்து அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஜெனிவா தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
இறுதி யுத்த காலப்பகுதியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை தொடர்பில் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோரினால் வெளியிடப்பட்ட கூட்டு பிரகடனத்தின் பின்னரே சர்வதேச அழுத்தம் இலங்கையின் மீது அதிகரிக்க தொடங்கியது.
சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றாமையே இத்தகைய அழுத்தம் பிரயோகிக்கப்படுவதற்கு பிரதான காரணமாக திகழ்ந்தது. 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தென்னிலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல் இடம்பெற்றன. . ஊடகவியலாளர்.களை கடத்தியமை, கொலை செய்தமை போன்றன பிரதான அங்கமாக கருதப்படுகின்றன
.நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடில் இலங்கையில் நிச்சியமாக சர்வதேச நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருக்கும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சிரேஷ் சட்டவல்லுணர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இதன் அறிக்கையை அரசாங்கம் மூடி மறைத்தது. மேலும் உடலாகம ஆணைக்குழுவின் அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
குறித்த ஆணைக்குழுக்களினால் எதுவும் நடக்கவில்லை. இதனை ஆராய இலங்கை வரவிருந்த சர்வதேச பிரதிநிதிகளையும் தடுத்து நிறுத்தியது. இதனால்தான் பாரிய விபரீதங்களுக்கு எமக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. காணாமல் போனோர் தொடர்பில் எந்த விசாரணை அறிக்கையும் இதுவரைக்காலமும் வெளியிடப்படவில்லை.
ஆகவே உண்மையை கண்டறிவதற்கு தற்போது அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரும் தெரிவிக்கும் கருத்துக்களின் ஊடாக அறிய முடிந்துள்ளது. இதற்கமைய அரசாங்கம் அடுத்த கட்டமாக நான்கு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
உண்மையை கண்டறிவதற்கு ஆணைக்குழுவை அமைக்கும். அதேபோன்று காணாமல் போனோருக்கான அலுவலகம் உள்ளக விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் ஆகியவற்றை அமைக்கவுள்ளது. வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும்.
இதன்போது சர்வதேச சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவது குறித்து பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலங்கையில் சர்வதேச பிரதிநிதிகளுடனான பங்களிப்பில் அமைந்த விசாரணைகள் என்பது புதிதல்ல. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க கொலை தொடர்பில் விசாரிக்கப்பட்ட செயற்பாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அதேபோன்று உடலாகம ஆணைக்குழுவிலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தனர். ஆகவே இதனை அடிப்படைவாத குழுக்கள் நாட்டு மக்களுக்கு சர்வதேச தலையீடு என்ற பெயரில் பாரிய உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறிவருகின்றனர்.
ஒரு நாட்டில் பயங்கரவாதம் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் காணப்படுமாயின் அதனை எக்காரணம் கொண்டும் உள்நாட்டு விவகாரமாக கொள்ள முடியாது. அது சர்வதேச பிரச்சினையாக மாறும். ஆகவே சர்வதேச பிரதிநிதிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பது சிறப்பானதாக அமையும். இதன் ஊடாக உரிய தீர்வை பெறமுடியும் என்பதுடன் உண்மையை கண்டறிய முடியும்.
அதேபோன்று கலப்பு நீதிமன்றம் அமைப்பதும்சிறப்பானதாக இருந்தாலும் இதனை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளதால் உள்ள க விசாரணை முன்னெடுக்கப்படும். புலம் பெயர் தமிழர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுப்பிவருகின்றனர். பிரச்சினையாக காணப்படும் புலம் பெயர் தமிழர் விவகாரத்தை எமக்கு உரிய தீர்வாக மாற்றுவதே சவாலாக உள்ளது. அனைத்து நாடுகளிலும் புலம் பெயர் தமிழர்கள் காணப்படுகின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் அடிப்படைவாதிகளல்ல. அவர்களை இணைத்துக்கொண்டு செல்வதன் ஊடாகவே இந்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும்.
சர்வதேசத்தில் எழுந்துள்ள பிரச்சினை வடக்கு கிழக்குக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தென்னிலங்கையிலும் பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விளைவாகத்தான் சர்வதேச அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.








