கைதிகளின் எழுத்து மூல கோரிக்கை ஜனாதிபதிக்கு சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு
தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக கையளித்த எழுத்து மூலமான கோரிக்கை ஆவணம் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.
நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததைத் தொட ர்ந்து சிறைச்சாலைகள்
ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார முற்பகல் 11.30மணியளவில் மெகசின் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.இதன்போது தமது விடுதலை தொடர்பாக வலியுறுத்தி இவ்வுண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஆணையாளரிடம் கைதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக உரிய கவனமெடுக்குமாறும் கோரினர். இந்நிலையில் அவர்களது கோரிக்கைகளை எழுத்துமூலமாக அளிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆணையாளர் அதனை பெற்று சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கருத்து வெளியிடுகையில்,
தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை நிருவாகத்திற்கு எதிராகவோ அல்லது ஏனைய கைதிகளுக்கு எதிராகவோ சிறைச்சாலை செயற்பாடுகளுக்கு எதிராகவோ தமது போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தியே அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இவர்களின் கோரிக்கைகளை எழுத்துமூலமாக என்னிடம் கையளிக்குமாறு கோரியிருந்தேன். அதனடிப்படையில் அவர்களது விடுதலை தொடர்பாக என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எழுத்துமூலமான கோரிக்கை ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கும் முகமாக சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.








