உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம்! வலியுறுத்துகிறது பிரிட்டன்
இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்கத்திற்கும் பொறுப்புக்கூறலுக்குமான உள்ளக விசாரணை பொறிமுறை செய ற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம் பெற வேண்டியது அவசியமாகும் என்று பிரிட்டன் வலியுறுத்தியிருக்கிறது.
தமிழர் விவகாரம் தொடர்பான பிரிட்டன் பாராளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே அந்நாட்டின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவல்கள் அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையும் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், ஆகியோர் இலங்கையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இடம் பெறவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்ததாகவும், பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவல்கள் அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழர்கள் விவகாரம் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு ஹியூகோ ஸ்வையர் அனுப்பிவைத்துள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு தண்டனை அளிக்கும் வகையிலும் நீதிமன்ற செயற்பாடுகளை இலங்கையின் உள்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு அமைய முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை பெற்றுக் கொடுக்கின்றது.
சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் என்பன தொடர்பாக இலங்கை முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசம் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை அலுவலகம் ஊடாக தொடர்ச்சியான மதிப்பீட்டை செய்யவேண்டும் என்றும் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை வலியுறுத்தி இருக்கின்றது.
இவ்வருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு நான் விஜயம் மேற்கொண்ட பின்னர் பிரிட்டனில் சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கையின் நிலைமை தொடர்பில் விளக்கமளித்திருந்தேன். ஜனவரி மாதத்திலிருந்து இலங்கையில் ஆரோக்கியமான செயற்பாடுகள் தொடர்கின்றன.
இலங்கையின் முன்னைய அரசாங்கம் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை முற்றாக எதிர்த்திருந்தது. ஆனால் இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் ஆக்கபூர்வமான தொடர்புகளை பேணி வருகிறது.
இந்த முழுமையான இலங்கையின் புதிய அனுகுமுறையையும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ள பிரேரணையையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கையையும் நான் வரவேற்கின்றேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை நிறைவேற்றப்பட்ட பிரேரணை மற்றும் இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் என்பவற்றில் பிரிட்டன் முழுமையான வகிபாகம் ஒன்று வகித்தமை தொடர்பில் பெருமை அடைகிறது.
அதுமட்டுமன்றி இலங்கையினதும் பிரிட்டனினதும் சிவில் மற்றும் அரசியல் குழுக்கள் இந்தப் பிரேரணை தொடர்பில் சிறந்த கருத்துக்களை முன்வைத்துள்ளன. தற்போது செயற்பாட்டை மேற்கொள்ளவேண்டிய பணி இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்கே காணப்படுகின்றது.
ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதை பிரிட்டன் விரும்புகிறது. அதாவது இலங்கையானது நம்பகரமாக இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென பிரிட்டன் விரும்புகிறது. இந்த செயற்பாடுகளுக்கு காலம் எடுக்கலாம். ஆனால் சர்வதேச சமூகத்தின் உதவி தேவையான அனைத்து சர்ந்தப்பங்களிலும் வழங்கப்படும்.
பிரிட்டனானது இலங்கையின் இந்தப் புதிய நிலைமைகளில் நிச்சயமாக தனது பங்களிப்பை முழுமையாக மேற்கொள்ளும், இந்த இடத்தில் சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தொடர்ச்சியான இலங்கை மற்றும் இலங்கை மீதான அக்கறை தொடர்பில் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் எதிர்காலத்தில் இந்தப் பாராளுமன்றக் குழுவுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை அனைத்து மக்களுக்காக கட்டியெழுப்புவதிலும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் வகையிலான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் அனைத்து விடயங்களையும் முன்னோக்கி ஆராய்ந்து செல்வதிலும் இலங்கையுடன் இணைந்து செயற்பட பிரிட்டன் தயாராக இருக்கிறது.








