கிளிநொச்சி மாவட்டத்தில் 7,076 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏழாயிரத்து 76 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக மாவட்ட செயலகப்புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம், விபத்துக்கள் உள்ளிட்ட பல காரணங்களினாலும் தொழில் வாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்லுதல் குடும்பப் பிணக்குகள் காரணமாக குடும்ப பிரிவுகள் காரணமாகவும் என பல்வேறு காரணங்களினால் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஏழாயிரத்து 76 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றன.
குறிப்பாக நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இருபது வயதிற்கு உட்பட்ட 34 குடும்பங்களும் முப்பது வயதிற்கு உட்பட்ட 526 குடும்பங்களும் நாற்பது வயதிற்கு உட்பட்ட ஆயிரத்து 124 குடும்பங்களும் ஐம்பது வயதிற்கு உட்பட்ட ஆயிரத்து 335 குடும்பங்களும் அறுபது வயதிற்கு உட்பட்ட ஆயிரத்து 507 குடும்பங்களும் அறுபது வயதிற்கு மேற்பட்ட இரண்டாயிரத்து 550 குடும்பங்களும் என பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான பெண் தலைமைத்துவ குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் தமது அன்றாட வாழ்வாதார செயற்பாடுகளுக்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








