Breaking News

ஞானசார க்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன்



இலங்கையில் வாழும் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர் எல்லோரும்தான் இந்தியா போக வேண்டும் என அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விஜய இளவரசன் மத்திய இந்தியாவிலிருந்து இலங்கையின் மேற்கு கரைக்கு வந்தார். அவருடன் அவரது நண்பர்களும் வந்தார்கள்.

இங்கு வந்த அவர் வேடர் குல அரசியான குவேனியை மணம் புரிந்தார். பின்னர் வேடர் குல அரசியை விரட்டிவிட்டு, தென்னிந்தியாவில் இருந்த தமிழ் இளவரசியை அழைத்து வந்து திருமணம் புரிந்துக்கொண்டார்.

தமிழ் பெண்களையும் அழைத்து வந்து தன் நண்பர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார். எனவே, பெண்களை தென்னிந்தியாவுக்கும், ஆண்களை மத்திய இந்தியாவுக்கும் அனுப்பி நாட்டை வேடர்களுக்கு கொடுத்துவிடுவோமா என அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.

எல்லா விடயத்துக்கும் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டுவோம் என சொல்வது ஏன்? இந்த நாடு தமக்கு மட்டுமே சொந்தம். ஏனைய எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவர்கள் இதை கைவிட வேண்டும். வடமாகாண முதல்வருடன் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதுங்கள். அதற்காக அனைத்து தமிழரையும் விரட்டுவோம் என்று சொல்ல முடியாது.

மீண்டும் நாம், கடந்த இருண்ட காலத்துக்குள் செல்ல முடியாது என அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.