தமிழர் பிரச்சினை குறித்து பேச சுவாமிக்கு தகுதியில்லை: சுரேஷ் பதிலடி
பௌத்தர்கள் இல்லாத வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புத்த சிலையை நிறுவுவதோ அல்லது பௌத்த விகாரைகளை அமைப்பதோ தமிழர் தாயகப் பகுதிகளைப் பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடாகும்.
இதனை புரிந்துக் கொள்ளாத அமைச்சர் சுவாமிநாதன், தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினை குறித்துப் பேசுவதற்கும் தகுதியற்றவராவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த அமைச்சர் சுவாமிநாதன், தமிழ்ப் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் மற்றும் விஹாரைகள் அமைப்பதால் என்ன தவறு என கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியிலிருந்து புத்த விகாரைகளையும், சிலைகளையும் அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் நிறுவி அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழ் மக்களுடைய விகிதாசாரப் பரம்பல் மாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய அரசாங்கமும் தமிழ்மக்களுடைய விகிதாசாரத்தை மாற்றும் வகையில் இராணுவத்தின் மூலமாக புத்த சிலைகளை நிறுவி வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொரு விடயமாகும்.
இதேவேளை, வட கிழக்கு முழுவதும் தற்போது இராணுவத்தின் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்றது. இந்த சூழலில் சிங்கள மக்களே வாழாத தமிழர் பகுதிகளில் இராணுவம் புத்த விகாரைகளையும், புத்த சிலைகளையும் நிறுவுவது தவறானதொரு விடயமென அமைச்சர் ராஜித சேனாரத்னவே கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது’ என்றார்.








