Breaking News

கடும் பனியில் நடுங்கிக்கொண்டு தீர்வை எதிர்பார்த்து போராடும் வடக்கு மக்கள்



படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கின் பல பகுதிகளில், கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் வீதிகளில் குழந்தைகள் முதல் முதியோர் வரை இரவு பகலாக போராடி வரும் நிலையில், இதுவரை எவ்வித தீர்வையும் வழங்காமையானது அரசின் பாராமுகத்தையே வெளிப்படுத்துகின்றதென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 22 நாட்களை எட்டியுள்ளதோடு, புதுக்குடியிருப்பு மக்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் இரவு பகலாக இன்றும் தொடர்கின்றது.

மறுபுறத்தில், காணாமல் போன தமது உறவுகள் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் நேற்று முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் போராட்டத்திற்கு இன, மத, மொழி பேதமின்றி பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றபோதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் முன்வைக்காமையானது இம்மக்களை விரக்தியடைய வைத்துள்ளது.

வடக்கில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படும் நிலையில், குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுடன் இரவு வேளைகளில் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருவதாக தெரிவிக்கும் இம் மக்கள், தமது நிலையை கருத்திற்கொண்டு தமது நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.