Breaking News

ராஜபக்ஷ அரசாங்கம் எனக்கு கஷ்டத்தை தருகிறார்கள் - ரிஷாத் பதியுதீன்

மொட்டுக்கட்சிக்கு வாக்களித்தால் எமது சிறுபான்மை மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் எனத் தெரிவித்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்கள் விடயத்தில் நீதியாக நடந்துகொள்ளவில்லை என்றால், ஜெனீவாவுக்குச் சென்று சர்வதேச நாடுகளின் உதவியுடன் நீதியைப் பெற்றுக்கொள்வோம் எனவும் கூறினார்.

புத்தளம், உளுக்காப்பள்ளம் பிரதேசத்தில் நேற்று (01) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வௌியிடுகையில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் இருக்கின்ற நிலையில் என்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து எனது தேர்தல் பரப்புரையை குழப்ப பார்க்கிறார்கள். எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, வன்னி போன்ற பிரதேசங்களில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம்.

இப்படி இருக்கையில், எமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பணிகளை முன்னெடுக்க எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அழைப்பு விடுக்கிறார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை விசாரணைகள் எதுவுமின்றி, வேண்டுமென்றே கடந்த 4 மாதங்களாக தடுத்து வைத்திருக்கிறார்கள். எனது சகோதரர் குற்றம் இழைத்திருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், என்மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எனது சகோதரரை தடுத்து வைத்திருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களிடத்தில் அவரை ஒரு பயங்கரவாதியாக காட்டி அதன்மூலம் வாக்ககளை சேகரிக்கிறார்கள்.

எனது சகோதரரைப் போல என்னையும் விசாரணை என்ற போர்வையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்க்கு வரவழைத்து அவர்களுக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கைது செய்வதற்கான சதித்திட்டங்களும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு என்னையும் கைது செய்து சிறையில் அடைத்தால் அதனைக் காட்டியும் பெரும்பான்மை மக்களிடத்தில் தாங்கள் பயங்கரவாதிகளையும், அதற்கு துணைபோனவர்களையும் பிடித்து சிறையில் அடைத்து விட்டோம் என்று காட்டி பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் அவர்களது வாக்கு வங்கிகளை அதிகரிப்பதற்கும், மூன்றில் இரண்டு பெறுவதற்கும் விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் எங்களுக்கு எதிராக இவ்வாறான சதிகளை செய்கிறார்கள்.

ஒரு குறுகிய காலத்திற்குள் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்ற எனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க விடாமல் என்னை பின்தொடர்ந்து எனக்கு இந்த ராஜபக்ஷ அரசாங்கம் கஷ்டத்தை தருகிறார்கள். செய்யாத ஒரு குற்றத்திற்காக என்ன பழிதீர்க்கப் பார்க்கிறார்கள். எனக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்கிறார்கள்.

ஒர சிறுபான்மை சமூகத்தின் தலைவராக இருக்கின்ற எனக்கு செய்கின்ற இவ்வாறான அநியாயங்களைப் போல இந்த நாட்டில் வேறு யாருக்கும் எந்த அரசாங்கமும் செய்யவில்லை. அந்தளவுக்கு என்னை நோவினைப்படுத்துகிறார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு, தங்களது ஆட்சி அதிகாரங்களை தக்க வைப்பதற்கு என்னை பழிதீர்க்கப்பார்க்கிறார்கள். என்னை, எனது குரலை நசுக்கப் பார்க்கிறார்கள். ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைவர்களை அடக்க நினைப்பது என்பதானது சமூகத்தை அடக்க நினைப்பதற்கு சமமாகும்.

அதுமாத்திரமின்றி, இன்று எமது ஜனாஸாக்களை எரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் வேதனைப்படுகின்ற, அழுது புலம்புகின்ற எமது மக்களின் துன்பத்தில் இன்பம் காணுகின்ற இந்த ராஜபக்ஷ அரசுக்கு வாக்களியுங்கள் என்று எமது முஸ்லிம் சகோதரர்கள் எந்த முகத்தைக்கொண்டு எமது சமுதாயத்தினரிடம் வாக்கு கேட்கிறார்கள்.

எங்களுடைய ஜனாஸாக்களை எரிக்காமல் தாருங்கள் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கெஞ்சினோம். மன்றாடினோம். ஆனால் அவர்கள் இதனை கணக்கில் எடுக்கவில்லை. எமது கோரிக்கைகளை நிராகரித்தார்கள். அதனை அடுத்து நாம் இதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறோம். இதன் ஊடாக நீதிமன்றம் எமக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, வக்பு சட்டம், காழி நீதிமன்றச் சட்டம் மற்றும் தனியார் சட்டங்கள் இருக்கிறது. இந்த சட்டங்களை ராஜபக்ஷவினர் எமக்க தரவில்லை. எமது முன்னோர்கள், சுதந்திரத்திற்காக கஷ்டப்பட்டவர்கள், சுதந்திரத்திற்கு பின்னர் இந்த சட்டங்களை எமக்காகப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். பின்னர் அவை சட்டமூலமாக்கி எங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளாகும்.

இந்த உரிமைகளை பறித்தெடுப்போம் என்று தென்பகுதியில் வெட்கமில்லாமல் பெரும்பான்மை மக்களிடத்தில் பிரச்சாரங்களை செய்கின்ற அதே நேரம் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தேசியப்பட்டியல் தருகிறோம், தூதுவர் பதவி தருகிறோம், ஆளுநர் பதவி தருகிறோம் என்று எங்களுடைய சில ஏஜன்டுகளுக்கு ஆசைவார்த்தைகளை சொன்னதனால், அவர்கள் எமது மக்களிடத்தில் சென்று மொட்டுக்கு வாக்களியுங்கள் இல்லையென்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை பழிவாங்குவார்கள் என்று குருநாகல், கண்டி, வன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அந்த மக்களை அச்சுறுத்தி வாக்கு கேட்டு வருகிறார்கள்.

எனவே, கடந்த முப்பது வருடங்களாக புத்தளம் மக்கள் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இந்த முறை தராசு கூட்டணி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஏஜென்டுகளுக்கு இந்த தேர்தல் மூலம் புத்தளதம் மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாக்களித்தால் இம்முறை தராசு கூட்டணியில் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.