Breaking News

நேற்று அடையாளம் காணப்பட்ட 866 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி!

இலங்கையில் இதுவரையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா தொற்றுறுதியானோர் நேற்றைய தினம் பதிவாகினர். நேற்றைய தினம் 866 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பேலியகொடை மீன் சந்தையில் 535 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 265 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 48 பேருக்கும், கொவிட் 19 தொற்றுறுதியானதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவத்துள்ளார்.  

நாட்டில் கடந்த 6ஆம் திகதி 739 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.  

இந்த நிலையில், நேற்றைய தினம் 866 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.  

இலங்கையின் மிகப்பெரிய கொரோனா கொத்தணியாக மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி பதிவாகியுள்ளது. மினூவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை முதலான கொத்தணிகளில் மாத்திரம் இதுவரையில் 3 ஆயிரத்து 682 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.  

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நேற்றிரவு 10 மணிக்கான கொரோனா நிலவர அறிக்கையின்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுதியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 153 ஆக உயர்வடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 495 ஆக உயர்வடைந்துள்ளது.  

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 83 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில்; இருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.   

வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட ஆயிரத்து 417 பேரும், தனிமைப்படுத்தப்பட்ட உள்நாட்டவர்கள் 78 பேரும் கொரோனா தொற்றுறுதியானவர்களில் உள்ளடங்குகின்றனர்.   

கடற்படையை சேர்ந்த 906 பேரும், ஏனைய படைகளை சேர்ந்த 17 பேரும், கந்தக்காடு புனர்வாழ்வு முகாமை சேர்ந்த 597 பேரும், வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவரும் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் உள்ளடங்குகின்றனர்.