Breaking News

இலங்கையில் இருந்து மீட்கப்பட்ட 16 படகுகள் இராமேஸ்வரத்தில்!

இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 16 படகுகள் மீட்கப்பட்டு வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டன. 

இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 86 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்திருந்தது.  இவை அனைத்தையும் விடுவிக்குமாறு இலங்கை அரசு பெப்ரவரி 26-ம் திகதி உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக மீட்புக் குழுவினர் மார்ச் மாதம் 34 படகுகளை மீட்டு வந்தனர். 

இந்த நிலையில், 2-வது கட்டமாக இராமேஸ்வரம், புதுக்கோட்டை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 143 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் மீதம் உள்ள படகுகளை மீட்பதற்காக கடந்த 22-ம் திகதி 18 படகுகளில் இலங்கைக்கு வந்தனர். 

இவர்கள், இலங்கையில் தலைமன்னார், காரைநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16 படகுகளையும், அதில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் மீட்டு இராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வந்து சேர்த்தனர் என தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது.  இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்திருந்த தமிழக மீனவர்களின் 86 படகுகளில் இதுவரை 50 படகுகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 36 படகுகள் மீட்க முடியாத நிலையில் இலங்கையிலேயே உள்ளன.