Breaking News

பாராளுமன்றம் கலைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு

வடக்கு,கிழக்கு தமிழர் பிரச்சினைகளை கையாளக்கூடிய புதிய நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கும் வகையில், தற்போதைய நாடாளுமன்றத்தை கலைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சுரேஸ் பிரேமச்சந்திரன்,

”நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, அதற்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது குறித்து அனைத்துலக அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடவென பல குழுக்களையும் நாம் அமைத்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றினதும் வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தெரிவு செய்வது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். ஆனாலும், நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எமக்குத் தெரியாது.

இப்போதைய நிலையில் புதிய நாடாளுமன்றம் அமைவதையே நாம் விரும்புகின்றோம். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக திட்டவட்டமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் கூறியிருக்கிறது. எனவே தேர்தல் வருவதை நாமும் விரும்புகின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.