13 இன் அடிப்படையில் ஆறு மாதங்களில் தீர்வு! ஐ.ம.சு.மு.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு
அரசியலமைப்பின்13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை மேலும் பலப்படுத்தும்
வகையில் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றைக் காண்பதற்கு ஆறு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உள்ளடங்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வுகாணப்படும். புதிய அரசாங்கம் அமைந்து ஒரு மாதத்தினுள் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரஜைகளுக்கும் நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதிசெய்வதற்காக அதிகாரங்களுடன் மாவட்ட ரீதியான பொறிமுறை ஒன்றுடன் கூடிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஒரு வருட காலத்திற்குள் அமுல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பில் வெ ளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட ஐ.ம.சு.மு.வின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்ற பெயரில் 12 அம்சங்களை தொனிப்பொருளாகக் கொண்டு இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாதுகாப்பு
தேசியப் பாதுகாப்பை ஒருபோதும் காட்டிக்கொடுக்காத சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் அனைவருக்கும் சமமான நீதியுடன் கூடிய எந்த நாட்டுக்கும் கட்டுப்படாத பெருமை மிக தேசம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம்.
தேசிய ஒற்றுமை புரிந்துணர்வு
இலங்கை சிங்கள பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பல்லினங்கள் மற்றும் பல் மதத்தினர் வாழுகின்ற நாடு என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றோம். மக்கள் சுதந்திரமாக தமது மதத்தைப் பின்பற்றவும் தமது மத அடிப்படையில் செயற்படவும் தேவையான சூழலைக் கட்டியெழுப்புவோம். குறுகிய மதவாத சிந்தனையின் அடிப்படையில் நிகழும் மதத் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
அரசியல் தீர்வு
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு உட்பட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை மேலும் பலப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றைக் காண்பதற்கு ஆறு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உள்ளடங்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வுகாணப்படும். புதிய அரசாங்கம் அமைந்து ஒரு மாதத்தினுள் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். அனைத்துப் பிரஜைகளுக்கும் நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதிசெய்வதற்காக அதிகாரங்கள் மற்றும் மாவட்ட ரீதியான பொறிமுறை ஒன்றுடன் கூடிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றுவோம். அரசியல் அழுத்தங்களற்ற அனைத்துப் பிரஜைகளினதும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவோம்.
ஊழல்களை ஒழித்தல்
நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அனைத்துப் பிரஜைகளினதும் கௌரவத்தையும் உரிமையையும் பாதுகாக்கவும் வெ ளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆட்சியை உருவாக்குவோம். இதற்கு முன் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வோம். இவற்றை மேற்பார்வை செய்ய சர்வதேச புத்திஜீவிகள் குழாமை நியமிப்போம். குற்றவாளிகளாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக சட்டதிட்டங்களுக்கு அமைய தண்டனை வழங்கப்படும். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தப்படும். அனைத்துக் குற்றவாளிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
நீதித்துறை
நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்போம். நீதிமன்றத்தின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக மனித மற்றும் பௌதீக வளங்களைப் பெற்றுக்கொடுப்போம். நீண்டகாலம் தாமதமாகும் வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நல்லாட்சி என்றை போர்வையில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
பொருளாதாரம்
2020 ஆம் ஆண்டளவில் மொத்த தேச உற்பத்தியினை நூறு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்போம். தனிநபர் வருமானத்தை 7ஆயிரம் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்போம். 15 இலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவோம்.
நாட்டின் அபிவிருத்தியை தீர்மானிப்பதற்காக அறிவுசார் புத்திஜீகளைக் கொண்ட தேசிய பொருளாதார ஆலோசனை சபை ஒன்றை நிறுவுவோம். எட்டு வீத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து 2020 ஆம் ஆண்டில் வறுமையை ஒழிப்போம். நெல் ஒரு கிலோவுக்கு 50 ரூபா நியாய விலையை வழங்குவோம். 10 வருடங்களுக்கு மேல் அரச காணிகளில் குத்தகை அடிப்படையில் விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு அக்காணிகளை உரித்துடையதாக்க நடவடிக்கை எடுப்போம்.
தேயிலை கிலோ ஒன்றுக்கு 90 ரூபா நியாய விலையைப் பெற்றுக்கொடுப்போம். 2020 ஆம் ஆண்டில் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நான்கு மில்லியன் வரை அதிகரிப்போம். இதன் மூலம் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவோம். ஆடைக் கைத்தொழிலில் சேவையாற்றும் பெண்களுக்காக பத்து ஆலோசனை சபைகளை உருவாக்குவோம். 5 வருடங்களுக்கு மேல் ஆடைக்கைத்தொழில் துறையில் பணியாற்றுபவர்களுக்கு சலுகை வட்டியுடன் வீட்டுக்கடன் மற்றும் காப்புறுதிகளை வழங்குவோம்.
வெளிநாட்டுக் கொள்கை
சிறந்த வெ ளிநாட்டு தொடர்புகளைப் பேண அணிசேரா வெ ளிநாட்டுக் கொள்கை அவசியம் என்பதை ஏற்கின்றோம். இந்தியா மற்றும் ஆசிய நட்பு நாடுகளுடன் எமது உறவு பலப்படுத்தப்படும். இலங்கைக்கு எதிரான திரிவுபடுத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து படைவீரர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடமைப்பு, காணி
அனைத்துப் பிரஜைகளுக்கும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாடகை குடியிருப்பாளர்கள் புதிதாக திருமணமானவர்கள் உள்ளிட்ட வீடு உரிமையற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நான்கு மில்லியன் ரூபா வரை கடன் பெற்றுக்கொடுக்கப்படும். தோட்ட லயன் அறைகளில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கே உரித்தான வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை தொடரும். வீடமைப்பு விடயத்தில் படை வீரர்களுக்கான சலுகை தொடரும். வெ ளிநாடுகளில் தொழில்புரிவோருக்கு நான்கு மில்லியன் ரூபா வரை விசேட சலுகை கடன் வழங்கப்படும். 30 வருட யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து முறையான இருப்பிடங்களில் மீளக்குடியேற்றுவோம்.
கல்வி
நாட்டின் அனைத்து மாணவர்களினதும் இலவச கல்வி உரிமை உறுதிப்படுத்தப்படும். 18 வயது முதல் 25 வயது வரையான நாட்டின் அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இலவச கல்வி மறுவாழ்வு நிதியத்தை ஸ்தாபிப்போம். இரண்டு கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கும் வகையில் சிறுவர் தோழன் என்னும் பாலர் கல்வி மற்றும் குழந்தை காப்பகம் அமைக்கப்படும். அனைத்து ஆரம்பப் பாடசாலைகளுக்கும் வட்டியற்ற 50 ஆயிரம் ரூபா கடன் வழங்கப்படும். ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.
உயர்தரப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கணனி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு வட்டியற்ற கடன் பெற்றுக்கொடுக்கப்படும். சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெறாத ஒரு இலட்சம் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் கணிதத்தில் சித்திபெறும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் உயர்தரம் கற்க வாய்ப்பளிக்கப்படும். பல்கலைக்கழக அனுமதி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகம், கொப்பி, எழுத்து உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள 10 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்படும்.
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 6 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும். பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிக்கப்படும். ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றுகின்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர் பணியை நிறைவுசெய்தவர்களுக்கு தீர்வை வரியற்ற வாகனம் இறக்குமதி பத்திரம் வழங்கப்படும். அதிபர், ஆசிரியர் சம்பளப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படும். பல்லைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
சுகாதாரம்
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன், ஒவ்வொரு மாகாணத்திற்கும் சர்வதேச தரத்திலான வைத்தியசாலை ஒன்றும் அமைக்கப்படும். தனியார் வைத்தியசாலைகளும் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிறுநீரக நோயாளர் குடும்பங்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும். 25 ஆயிரம் குடும்ப சுகாதார தாதியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 65 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள 3 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதுடன் பாரதூரமான சத்திரசிகிச்சைக்காக 5 இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படும்.
ஊடகம்
ஊடகம் தொடர்பில் நன்நெறிக் கட்டமைப்பை உருவாக்க அரச அனுசரணை பெற்றுக்கொடுப்போம். ஊடகவியலாளர்களுக்கு தொழில் தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ள அவசியமான கல்வி மற்றும் சட்டப் பின்னணி உருவாக்கப்படும். கலைஞர் மற்றும் ஊடகவியலாளருக்கு ஓய்வூதிய மற்றும் மருத்துவக் காப்புறுதி வழங்கப்படும். சர்வதேச தரத்திலான திரைப்பட விருது வழங்கும் விழா வருடந்தோறும் நடத்தப்படும். கலைஞர்களுக்காக வழங்கப்பட்ட வட்டியற்ற 15 இலட்சம் ரூபா வாகனக் கடன் தொடர்ந்து வழங்கப்படும்.
இளைஞர்
அரசாங்கம் பதவியேற்று ஆறு மாதங்களில் அரச துறையில் 60 ஆயிரம் தொழில்வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குவோம். குறைந்த வருமானமுள்ள குடும்பங்களில் இளைஞர், யுவதிகளுக்கு 2 இலட்சம் ரூபா வட்டியற்ற திருமணப் பரிசு கடன்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து இளைஞர், யுவதிகளும் தமது முதலாவது வாகனத்தை கொள்வனவு செய்ய அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டியில் கடன் பெற்றுக்கொடுக்கப்படும்.
மகளிர்
24 மணிநேரமும் பெண்கள் அச்சமும் சந்தேகமுமின்றி நாட்டின் எப்பகுதிக்கும் பயணிக்கக் கூடிய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஒவ்வொரு பிள்ளைக்கும் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி வசதியை வழங்குவது கட்டாயமாக்கப்படும். அதனைப் பெற்றுக்கொடுக்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு வியாபார முயற்சிகளை ஆரம்பிக்க விரும்பும் பெண்களுக்கு 50 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை சலுகை வட்டியில் கடன் பெற்றுக்கொடுக்கப்படும். குறைந்த வருமானமுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 1500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.
உட்கட்டமைப்பு வசதி
2020 ஆம் ஆண்டு இலங்கையை தெற்காசியாவின் அதிசிறந்த நவீன உட்கட்டமைப்பு வசதிகொண்ட தேசமாக உருவாக்குவோம். எதிர்வரும் 5 வருடங்களுக்குள் கொழும்பிலிருந்து கண்டி ஊடான வடக்கு அதிவேகப் பாதை நிறுவப்படும். யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயில், திருகோணமலை கோணேஸ்வரர் கோயில், சிலாபம் முன்னேஸ்வரம் கோயில், தெவிநுவர உப்புல் வத்த தேவாலயம் ஆகிய நாற்திசை கோவில் வழிபாட்டுக்கு வசதியாக கதிர்காம ரயில் பாதையை திருகோணமலை வரை நீடிப்போம். உங்கள் வீட்டிலிருந்து 6 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் எந்தவொரு பாகங்களுக்கும் பயணிக்கும் வகையில் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உருவாக்கப்படும். இலங்கையின் ஒவ்வொரு வீட்டுக்கும் 2 வருடங்களுக்குள் குழாய் நீரைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் மறுசீரமைப்பு
நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மறுசீரமைப்பு செய்வோம். பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவோம்.
அரச சேவை
அரச சேவையை அரசியல் தலையீடுகளில் இருந்து மீட்டுக்கொள்ள சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படும். அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்து பணிகளை ஆரம்பிப்போம். இரண்டு மாதங்களுக்குள் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்போம். மேலும் இரண்டு மாதங்களுக்குள் தகவல் அறியும் சட்டமூலத்தையும் கணக்காய்வு சட்டமூலத்தையும் நிறைவேற்றுவோம்.