சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க கோரும் பிரதான அரசியல் கட்சிகள்
ஐக்கிய தேசிய க்கட்சியுடன் இணைந்து தேசிய அர சாங்கம் அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ள நிலையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்றும் எக்கட்சி எதிர்க்கட்சி என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
அந்தவகையில் தற்போது பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சியாகவும் அதன் தலைவர் இரா. சம்மந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் வரவேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களை பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது சக்தியாக 16 ஆசனங்களை பெற்றது.
இந்நிலையில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நேற்று அங்கீகாரம் வழங்கியது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவெடுக்க சுதந்திரக் கட்சியின் சார்பில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் எதிர்க்கட்சியாக வரப்போவது எந்தக் கட்சி என்பதே கேள்வியாக எழுந்துள்ளது. தற்போதைய அரசியல் கட்டமைப்பில் பிரதான இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்து அரசாங்கம் அமைத்தால் மூன்றாவது சக்தியாக உள்ள கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்பதும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனே எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்பதும் நியதியாகும்.
ஆனால் தற்போது நிலையில் தேசிய அரசாங்க எண்ணக்கருவை நிராகரித்துள்ள மஹிந்த தரப்பினர் சுயாதீனமாக சென்று தாங்கள் தனித்து பாராளுமன்றத்தில் இயங்கப்போவதாக தேர்தல் திணைக்களத்துக்கு அறிவித்தால் அவர்கள் எதிர்க்கட்சி அதந்ஸ்தை கோரலாம்.
ஆனால் அதற்கு அந்தக் குழுவில் கூட்டமைப்பு எம்.பி. க்களை அதிகமான எண்ணிக்கையில் எம்.பி. க்கள் இருக்கவேண்டும். இந.நிலையில் இன்று அல்லது நாளை இடம்பெறப்போகும் நிலைமைகளை பார்த்து யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதனை தீர்மானித்துவிடலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.








