கூட்டமைப்புடன் மட்டும் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது - பிரதமருக்கு சங்கரி கடிதம்
கூட்டமைப்புடன் மட்டும் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முடியும் என்ற கூற்று பகல் கனவே என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடாத்தி நிரந்தர அரசியல் தீர்வு காணத் தயார் என்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன கூற்று வெறும் பகல் கனவே. நல்லாட்சி மாற்றத்தின் போது உதவியவர்களுடன் அரசியல் தீர்விலும் ஒன்றாக பேசி தீர்வு காண்பது இலகுவான காரியம். நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளோம் என அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல் பேசுகின்றவர்கள் ஓரளவுக்கேனும் நாட்டின் சரித்திரத்தையும், மாற்றுக் கட்சிகளின் பல்வேறு நிலைப்பாடுகளை சரியாக தெரிந்திராமல் அரசியல் செய்ய முடியாது.
முதலாவதாக நல்லாட்சி மாற்றத்தின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியே முதன்முதலாக தனது ஆதரவினை தெரிவித்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு வாரங்களின் பின்பே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவித தீர்வுகளை முன் வைத்தது என்பது மட்டுமல்ல தென்னாபிரிக்கா போன்ற வேறு நாடுகளின் அரசியல் சாசனங்களையும் ஆராய்கின்றனர்.
வேறு பிரச்சினைகளை கிளப்பக்கூடிய மாற்றுக் கட்சிகளால் நிராகரிக்கப்படும் எனத் தெரிந்தும் வேறு ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றனர். ஆகவே ராஜித சேனாரத்ன சொல்வதை அவர்கள் கேட்கப்போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கின்ற தீர்வினை ராஜித சேனாரத்னவும் ஏற்கப் போவதில்லை. முக்கியமான விடயம் பல்வேறு கட்சிகளின் அனுசரணையின்றி எந்தத் தீர்வையும் எட்டமுடியாது.
தமிழர் விடுதலைக் கூட்டணி இந்திய அரசியல் சாசனத்தையொத்த முறையை வலியுறுத்தி வருவதோடு கடந்த பத்து ஆண்டு காலமாக அது சம்பந்தமாக பல்வேறு தலைமைகளுடனும், நாட்டின் பல்வேறு கட்சிகளுடனும் தாங்கள் தங்கள் கட்சி உட்பட கலந்துரையாடி வந்துள்ளது. இதே நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் தமிழர் விடுதலைக் கூட்டணியே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் புது அரசியல் சாசனத்தைத் தேடி தென்னாபிரிக்காவுக்கு பல தடவை விஜயம் செய்திருக்கின்றனர். அதன் விளைவாக இந்திய அரசின் வெறுப்பையும் ஓரளவுக்கு சம்பாதித்துக் கொண்டனர். ஆகவே குட்டையை மேலும் குழப்பாமல் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு தீர்வை தேடிப்பிடிப்பதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசி தீர்வு காணலாம் என நினைப்பதோ அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எண்ணுவதோ பொருந்தாத விடயமாகும்.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆலோசனையை நாட்டின் பல்வேறு இன மக்களும், தலைவர்களும் ஏற்கக்கூடிய அல்லது ஏற்க வைக்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. குறிப்பாக த.தே.கூ.வின் இரா.சம்பந்தனும் இந்திய முறையிலான தீர்வினை ஏற்கக்கூடியதாக இருக்கிறதென்று பகிரங்கமாக தொிவித்துள்ளார்.
எமது மேலதிகமான ஆலோசனை தென்னாபிரிக்கவின் பல்வேறு உரிமைகளையும் உள்ளடக்கிய சட்டக்கோர்வையை எமது அரசியல் சாசனத்தோடு இணைப்பது மிகப் பொருத்தமாக இருப்பது மட்டுமல்ல. அனேகரால் ஏற்கக்கூடியதாகவும் இருக்கும். ஆகவே புதுப்புது பிரச்சினைகளை கிளப்பி பிரச்சி னைகளுக்குரிய தீர்வை தூரத்துக்கு எடுத்துச் செல்லாமல் புத்தி சாதுரியமாக தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
இதில் முக்கிய விடயம் யாதெனில் மிகப் பெரியளவில் தற்பெருமையுடன் 18 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இயங்கி வந்த ஜனநாயக கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கிருந்த பெருமைமிக்க பழைய இடத்தை மீளப்பெறுகின்ற தகுதியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்து நிற்கிறது. ஏனெனில் மிக மோசமான முறையில் நாட்டில் நிலவிய ஜனநாயக பாரம்பரியத்தை த.தே.கூ. சீரழித்துள்ளமையாலேயே.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் கிடைத்த வெற்றியையே அவர்கள் இன்றும் சுமந்து நிற்கின்றனர். ஆனால் இந்த வெற்றியைப் பற்றி அதில் ஏற்பட்ட மோசடிகள் பற்றி அமைச்சர் ராஜித சேனாரத்ன அறியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும். ஆனால் இந்த உண்மையை முழு நாடு உட்பட சர்வதேச சமூகமும் அறிந்திருக்கிறது. ஆகவே ராஜித சேனாரத்ன ஆலோசனை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.








