Breaking News

உறவுகளுக்கு உயிர் கொடுத்த மாமா? -மெய்யன் நடராஜ்

புது­க்கோட்­டை­யி­லி­ருந்து புறப்­பட்டு ஆலங்­குடி வழியே மற­ம­டக்கி செல்லும் பேரூந்திலிருந்து வன்­னி­யர்­வி­டுதி சந்­தியில் இறங்­கி­ய­போது திருச்சி விமான நிலை­யத்தை விட்டு வெளியே வந்­த­போது சிறு மானை வேட்­டை­யாட சூழும் சிங்­கங்­களாய் சூழ்ந்த வாடகை வாக­ன­கா­ரர்­களின் தொந்­த­ர­வின்றி அமை­தியாய் இருந்­தது. 


மனதும் சூழலும் நான் பிறந்து வளர்ந்­தி­ருக்க வேண்­டிய மண். சந்­தர்ப்ப சூழ்­நிலை என்னை கடல் தாண்டி பிறக்க வைத்து விட்­டதால் தாய், தந்தை, பிறந்து வளர்ந்த ஊரை பார்த்­து­விட்டு வர, பய­ணித்த என்னை தென்றல் வீசி வர­வேற்­றது. இயற்கை கண்­ணுக்கு எட்­டிய தூர­மெல்லாம் நீண்டு உயர்ந்த மரங்­களின் வனப்பு இத­யத்தைக் கொள்­ளை­கொண்­டது. இறங்­கிய இடம் கிரா­மத்தின் நுழை­வாயில் என்­பதை பிர­தான வீதியில் இருந்து பிரிந்த சிறு வீதி அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

இலங்­கை கி­ரா­மப்­பு­றங்­களை ஒத்­த­தாக ஒரு பெட்­டிக்­கடை அற­மு­க­மில்­லாத ஒரு சில மனி­தர்கள் சுற்­று­வட்­டத்தின் ரச­னையில் மூழ்­கி­யி­ருந்த என்னை 'வாங்­கப்பா போவோம்' என்னும் மாமாவின் குரல் திசை திருப்­பி­யது. அந்த மாமா­வுக்கு எண்­ப­தைத்­தாண்­டிய வயது. இலங்கை பெருந்­தோட்­டங்­களில் பணி­பு­ரி­ய­வென்று சென்­றி­ருந்­த­வர்­களை மீள இந்­தி­யா­வுக்கு எடுத்­துக்­கொண்ட போது அந்தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி குடும்­பத்­தோடு தமி­ழகம் வந்­தவர். 

இன்னும் மாமாவின் சகோ­த­ரர்கள் மற்றும் உற­வுக்­கா­ரர்­க­ளா­கிய நாங்­களும் இலங்­கையில் இருக்க மாமா மட்டும் தமி­ழகம் வந்து குடி­யே­றி­விட்­டது இப்­போ­தைக்கு பெரும் உத­வி­யாக இருந்­தது. மாமா­விற்­குத்தான் இலங்­கை­யிலும் தமி­ழ­கத்­திலும் உள்ள உற­வு­களின் வர­லா­றுகள் ஒரு மடிக் கணி­னி­யைபோல் ஞாப­கத்தில் இருக்­கி­றது என்றால் அது மிகை இல்லை. மாமாவின் தொடர்பு மாத்­திரம் இல்­லாமல், இருக்­கு­மானால் இந்த ஊரை கண்டு பிடிப்­பதே எனக்கு பெரும்­பாடாய் இருந்­தி­ருக்கும். 

விமான நிலை­யத்திலிருந்து முதல் நாள் அழைத்து வந்­த­தி­லி­ருந்து இலங்­கையில் இருக்கும் உற­வுகள் ஒவ்­வொ­ரு­வ­ரையும் ஞாப­க­மூட்டி நலம் விசா­ரித்து அவர்­க­ளுடன் வாழ்ந்த நாட்­களின் பசு­மை­யான நாட்களை நினை­வு­ப­டுத்தி மகிழ்ந்து கொண்டார் மாமா, பலர் மறைந்து போயி­ருந்­தாலும் அவர்­களின் வாரி­சுகள் பற்றிக் கேட்டு தெரிந்து ஆனந்­தப்­பட்டார். கூட வந்­தி­ருந்த அண்ணன் மக­னையும் அழைத்­துக்­கொண்டு மாமா­வுடன் போவ­தற்கு ஆயத்­த­மானேன். ஒரு முக்கால் மைல் தூரம் நடக்­கணும் என்­ற­வ­ரிடம் 'வாகனம் ஒன்றும் வராதா' என்று கேட்டேன் நான்,

'வரும் அது எப்போ வரும் என்று தெரி­யாது. கொஞ்சம் தூரம்தான் நடந்தே போயி­டுவோம். நானே நடக்­கிறேன் உங்­க­ளுக்கு முடி­யாதா' என்ற அவரின் உற்­சாகம் எங்­க­ளையும் பற்றிக் கொள்ள பயணப் பொதி­களை சுமந்­து­கொண்டு அவரின் பின்னால் நடந்தோம்.

எழுத்­துக்­களை மிகத்­தெ­ளிவாய் மூக்குக் கண்­ணாடி இல்­லாமல் வாசிக்கும் அவ­ருக்கு தூரத்­துப்­பார்­வையில் சற்று கோளாறு. சட்டைப் பையில் இருந்த கண்­ணா­டியை எடுத்து அணிந்து கொண்­டவர் வெள்ளைச் சட்­டையும் கைலி­யோடும் மிடுக்காய் நடந்தார்.

இந்த வய­திலும் சுறு­சு­றுப்பாய் இயங்­கிய அவரின் நடை­யையும் பாதையின் இரு மருங்­கிலும் செழிப்பாய் வளர்ந்­தி­ருந்த கரும்பு, சோளம், நெல், பயறு மற்றும் உப­பயிர் வகைகள் அனைத்­தையும் கண்டு மகிழ்ந்த நடையில் ஒரு பத்து நிமி­டத்தில் அந்த ஊரின் மாரி­யம்மன் கோயில் வந்து விட்­டது. கோயி­லுக்கு முன்­பாக முற்­கா­லத்தில் கட்­டப்­பட்ட குளம் ஒன்று தண்ணீர் இன்றி தாகத்­தோடு இருந்­தது.

மூடி­யி­ருந்த கோயிலின் உட்­பு­றத்தை தரி­சிக்கும் நேரம் அது­வல்ல என்­பதால் கையெ­டுத்து ஒரு கும்­பிடு போட்­டு­விட்டு நடந்த அடுத்த சில நிமி­டத்தில் எனது தாய் - தந்தை வாழ்ந்த அந்த இடம் வந்­து­விட்­டது என்று மாமா சொல்ல மகிழ்ச்­சியில் மண்­ணைத்­தொட்டு வணங்­கினேன்.

பச்சை நெல்­வயல், வகை வகை­யான மரங்கள், ஆங்­காங்கே ஒரு­சில வேப்­ப ­மரங்கள், நடுவே ஒரு சிறு கூட்­டுத்­தொ­குதி வீடுகள், பார்ப்­ப­தற்கே மன­துக்கு இத­மாக இருந்­தது. இப்­ப­டியோர் இடத்தை விட்டு விட்டு சென்ற நூற்­றாண்டில் எதற்­காக தந்தை கப்பல் மூலம் இலங்­கைக்குப் போனார் என்று எனக்குள் கேட்­டுக்­கொண்­டி­ருக்கும் போது மாமா அங்­கி­ருந்த ஒரு வீட்­டுக்குக் கூட்­டிப்­போனார்.

அங்கே ஆண்­களும் பெண்­களும் குழந்­தை­களும் என முற்­றிலும் புதிய முகங்கள் மாமாவை அடை­யாளம் கண்டு கொண்­ட­வர்கள் 'வாங்க வாங்க' என்று மகிழ்ச்­சிப்­பொங்க வர­வேற்று கூடவே புது­மு­கங்­க­ளான எங்­களை யாரென்று தெரி­யாத தடு­மாற்­றத்­தோடு வீட்­டுக்குள் அழைத்துச் சென்று நாற்­காலி போட்­டார்கள்.

சற்று நேரத்தில் மாமா எங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தினார். ஆனால் அங்­கி­யி­ருந்த யாரும் எங்­களை அவ்­வ­ளவு எளிதாய் யூகித்து அடை­யாளம் கண்டு கொள்­ள­வில்லை.இருந்தும் மனம் தளரா மாமா மூன்று தலை­மு­றை­க­ளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் முன்­னோரின் வழித்­தோன்­றல்­கள்தான் நாமெல்லாம் என்று தனது மனக்­க­ண­னியைத் தட்டி எங்­க­ளுக்கும் அவர்­க­ளுக்கும் உள்ள உற­வுகள் பற்றி விளக்கிக் காட்­டி­ய­போது நாங்­களும் அவர்­களும் மாமன் மச்சான் உற­வு­முறை என்­பது புல­னா­னது. என்­றாலும் திருப்­தி­ய­டை­யாத அவர்கள் சரி அது கிடக்­கட்டும். 'இப்போ எதற்கு வந்­தி­ருக்­கி­றார்கள்' என கேட்­டார்கள். என்­னடா இப்­படிக் கேட்­கிற இது இவ­ரோட அப்பா அம்மா வாழ்ந்த பூமி பார்த்­துட்டு போக­லா­முன்­னுதான் வந்­தி­ருக்­காங்க. 'சரி சரி' என்­ற­வர்கள் வழ­மை­யான உப­ச­ரிப்­பு­க­ளுடன் எங்­க­ளுடன் கைகோர்த்துக் கொண்­டதில் மகிழ்ச்சியாய் இருந்­தது.

சில நிமி­ட­ங்­க­ளிற்­குப்பின் வீட்டுக்கு வெளியே வந்து குல­தெய்வ கோயில் என்று அவர்கள் கூட்­டிச்­சென்ற ஆல­ம­ரத்­த­டியில் பிரார்த்­தனை செய்தோம்.அங்­கி­ருந்து ஒரு சில யார் தூரத்தில் இருந்த ஒரு மரத்­தைக்­காட்­டினார் மாமா. அது ஒரு வேப்­ப­மரம் அந்த வேப்­ப­ம­ரத்­த­டியில் முன்பு ஒரு வீடு இருந்­ததாம்.

அந்த வீடு இப்­போது அங்­கில்லை. அந்த வீடுதான் என் அப்பா பிறந்து வளர்ந்த வீடாம். இப்­போது அந்த நிலமே வேறு ஒரு­வ­ருக்குச் சொந்­த­மா­கிப்­போ­யி­ருப்­பதால் தூர தரி­சனம் செய்து கொண்டோம்.

மாமாவின் வய­தொத்த அப்பா இப்­போது உயி­ரோடு இருந்­தி­ருந்தால் அவ­ரு­டைய ஊருக்கு வந்­த­ததை எண்ணி எவ்­வ­ளவு சந்­தோ­ஷப்­ப­டுவார் என்று என் மனது ஒரு கணம் எண்­ணிப்­பார்த்­தது.ஆனால் அந்த சந்­தோஷம் அவர் நான் சிறு­வ­யதாய் இருக்கும் போதே மறைந்து போன நினைவைக் கூட்­டி­வர நீர்க்­கு­மி­ழிபோல் உடைந்­து­போ­னது அவர் நினை­வுகள்.

'என்ன தம்பி யோசனை உங்க அப்பா மட்டும் இலங்­கைக்கு போகாமல் இருந்­தி­ருந்தால் அந்த வீடு பூமி­யெல்லாம் இப்­போது உங்­க­ளுக்கு சொந்­த­மாக இருக்கும். அதெல்லாம் பழைய கதை உங்­க­ளுக்­குத்­தெரி­யாது' என்று கூறி அந்த காலத்து ஞாப­கங்­களை மீட்க தொடங்கினார்.

பிறகு என்ன நினைத்­தாரோ தெரி­ய­வில்லை. அவரே அதை நிறுத்திக் கொண்டு இன்னும் முக்­கி­ய­மான ஒருத்­தரை பார்க்க வேண்டும் என்று கூறிக்­கொண்டே காலம் கடத்­தாமல் ஒரு நூறு மீற்றர் தூரத்தில் இருந்­த­ வேறொரு வீட்­டுக்கு எங்­களை அழைத்­துக்­கொண்டு போனார்.

அது ஒரு சாதா­ரண வீடு வீட்டின் முன்­வா­சலில் போடப்­பட்­டி­ருந்த ஒரு நாற்­கா­லியில் ஒரு முதி­யவர் உட்­கார்ந்­தி­ருந்தார். மாமா­வை­விட சற்று வயதில் குறைந்­தவர் என்­றாலும் உடல் தளர்ந்­த­வராய் காணப்­பட்டார்.

'வேலா­யுதம் நான் கந்­த­சாமி. என்­னப்பா இப்­படி வெளியே உட்­கார்ந்­தி­ருக்க கேட்­டவர், பதி­லுக்கு காத்­தி­ராமல் ஒரு முக்­கி­ய­மான விருந்­தா­ளி­யைக்­கூட்டி வந்­தி­ருக்­கிறேன் என்றார். அவரும் எங்­களை பார்த்தார்.நாங்கள் நமஸ்­காரம் செய்தோம். புரி­யாத அவரோ 'யாரு யாரப்பா இவுங்க எல்லாம்' 'நமக்கு வேண்­டி­ய­வு­கத்தான்.

சொன்னா சந்­தோஷ­ப்ப­டுவே சரி சரி வா உள்ளே போய் பேசுவோம்'. நால்­வரும் உள்ளே சென்றோம்.அதற்குள் எங்கள் வரு­கையை அறிந்த குடும்­பத்­த­வர்கள் எல்­லோரும் கூடி­விட மாமா என் அப்பா பெயரைச் சொல்லி அவ­ரோட பிள்­ளையும் பேரனும் தான் இவங்க என்று சொல்ல இதை நீ முத­லி­லேயே சொல்ல வேண்­டாமா என்று செல்­லமாய் கோபித்த அந்த முதி­யவர் சட்­டென்று எங்­களை அருகில் வரும்­படி அழைத்­துக்­கூட்­டிக்­கொண்டு ஆனந்தம் சொரிந்தார்.

அதன் பின்பு அவர் அவ­ரு­டைய குடும்­பத்­தா­ருக்கு எங்­களை யாரென்று தெரி­வித்­தப்­போதே எனது சின்ன வயதில் எங்கள் வீட்டில் இந்­தி­யாவில் இருக்கும் மூக்­கையா மாமா என்று அவ்­வப்­போது பேசக்­கேட்ட அந்த சொந்த மாமா இவ­ரென்று புரிந்­தது.

பல தசாப்­தங்­க­ளுக்குப் பிறகு விட்­டுப்­பிரிந்த உற­வுகள் மீண்டும் தொடர்­க­தை­யா­வ­தற்கு சுழி­போட்ட எங்கள் தமி­ழக விஜயம் கால அவ­காசம் கார­ணமாய் சாவ­கா­சமாய் இருந்து விருந்­துண்டு திரும்பும் அள­விற்கு போது­மா­ன­தாக இல்­லாமல் இருந்­தது. வந்­த­தற்­காக வெறும் தேநீர் அருந்­தி­விட்டு அவ­ச­ர­மாக புறப்­படும் எங்­களை இதற்கு நீங்கள் வரா­ம­லேயே இருந்­தி­ருக்­கலாம் என்று அவர்கள் எல்­லோரும் கண்­களால் பகர்­வதை அவர்களின் கண்ணீர்த் துளிகள் பறை­சாற்­றின.

அவர்கள் எல்­லோரைப் பார்க்­கிலும் மூக்­கையா மாமா­விற்­குத்தான் மிகவும் வேதனை. இத்­த­னைக்­கா­லத்­துக்குக் பிறகு வந்த உங்­களை கண்­ணா­ரப்­பார்ப்­ப­தற்­குத்தான் எனக்கு கொடுத்து வைக்­கல என்று கண்­க­லங்­கினார்.

'அட நீ ஒன்னு, இதுக்குப் போய் கண்­க­லன்­குற. இனி அடிக்­கடி வரு­வாங்க, உன்­னோட தங்­கச்சி பிள்­ளைங்க எல்லாம் வர ஆசை­யோடு இருக்­காங்­களாம். இவுங்க போய் தகவல் சொன்­னதும் உன்னை வந்து பார்த்­து­விட்டு போவாங்க நீ கவ­லைப்­ப­டாதே', என்று ஆறுதல்படுத்­தினார்.

எங்­களைக் கூட்டி வந்த மாமா அதுக்கு 'இல்லே கந்­த­சாமி' மறு­ப­டியும் கவலை தொனித்த அவரின் குரலை இடை­ம­றித்து 'இப்போ என்ன நீ இவங்­கள கண்­ணால பார்க்­கணும் அவ்­வ­ள­வு­தானே' பதி­லுக்குக் காத்­தி­ராமல் தன்­னு­டைய மூக்குக் கண்­ணா­டியை எடுத்துத் துடைத்து அவரின் கண்­களில் மாட்­டினார்.

'டேய் கந்­த­சாமி எனக்கு உன்­னோட கண்­ணா­டி­யிலே பார்வை நல்லா தெரி­யு­தடா என்­ற­வாறே என்னைப் பார்த்தார். எங்க மச்சான் மாதி­ரியே இருக்­கீங்க. இரண்டு பேரும் கொஞ்சம் கூட மாற்­ற­மில்ல, கந்­த­சாமி உன்­னோட கண்­ணா­டி­யாலே நான் மச்­சா­னையே பார்த்­துட்­டேன்டா' என்று மறு­ப­டியும் கட்­டித்­த­ழு­விக்­கொண்டார்.

பார்வை குறைந்­த­வர்­க­ளுக்கு மூக்குக் கண்­ணாடி என்­பது இரண்­டா­வது கண் அல்­லது தெய்வம் என்­பதை இந்த மாமா அந்த மாமாவின் கண்­ணா­டியை அணிந்­த­போது தோன்­றிய பர­வ­சத்தை கண்டு உணர்ந்தேன். சரி சரி நேரம் போகுது வண்­டிய விட்­டிட கூடாது.

புறப்­பட ஆயத்­த­மா­ன­போது அணிந்­தி­ருந்த கண்­ணா­டியைக் கழற்­றித்­த­ரு­வ­தற்கு முயற்­சித்தார் மூக்­கையா மாமா. 'உனக்­கென்ன பைத்­தி­யமா பிடிச்­சி­ருக்கு இதை நீயே வச்­சுக்கோ நான் வேறொன்று வாங்­கிறேன்.' அவ­ரிடம் கொடுத்­து­விட்டு எங்­களை அழைத்­துக்­கொண்டு வந்து விட்டார். மாமாவின் இந்த செயல் என்னை வெகுவாய் பாதித்­தது.

திரும்பி வரும் வழியில் மாமா சற்­றுத்­தட்­டுத்­த­டு­மா­றியே நடந்தார். அதற்­கான காரணம் அவரின் கண்­ணா­டியே என்­பது எங்­க­ளுக்கு தெளி­வாக விளங்­கி­யது.தனக்கே கண் பார்வை குறைவாய் இருக்­கும்­போது அவ­ருக்கு தன்­னு­டைய கண்­ணா­டியை கொடுத்து உத­வ­வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்­தது என்றக் கேள்வி என் மனதைக் குடைந்­தது என்­றாலும் அவ­ரிடம் கேட்­க­வில்லை.நாங்கள் எதுவும் கேட்­காமல் நடந்­தது மாமாவின் மனதைக் குடைந்­ததோ என்­னவோ பாத­ணிகள் மட்டும் பேசிக்­கொண்டு வந்த அந்த சாலையில் உதடுகள் பிரிந்து மாமா பேசினார்.

'பாவம்பா அவன் ரொம்ப நல்லா இருந்தான். எல்லாம் பெண் பிள்ளைகளாய் போனதால அதுகளை கரைசேர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டான். எனை­யா­வது பார்த்­துக்க புள்ள பேரன் பேத்­திங்க எல்லாம் இருக்­காங்க. ஆனால் அவ­னுக்கு எல்லாம் இருந்தும் ஒருத்­தரும் இல்­லா­த­வனாய் இருக்கான். நான் கஷ்­டப்­பட்டக் காலத்­தி­லேயே கைகொ­டுத்­த­வ­னுக்கு இந்த கண்­ணாடி ஒன்னும் பெரி­சில்ல. அதான் கொடுத்­துட்டு வந்தேன்.

இல்­லாத நேரத்­தில தன்­னைப்போல் இல்­லாத ஒருத்­தர்­கிட்ட இருந்து கிடைக்­கிற உதவி என்­பது வெறும் பணத்தால் ஈடு­கட்­ட­ மு­டி­யா­தது.' பேசிய மாமாவின் வார்த்­தை­களின் உருக்கம் நெஞ்சில் பசை­போட்டு ஒட்­டிக்­கொண்­டது.
அன்றே செய்­ததை அன்றே மறக்கும் இன்­றைய உலகில் என்றோ செய்ததை இன்றளவும் மறக்காதது மாமாவின் மனசு.