Breaking News

உறவுகளை தாருங்கள்’ : ஆணைக்குழுவிடம் கோரிக்கை



காணாமல் போன தமது உறவுகளுக்காக எவ்வித நட்ட ஈட்டையோ உதவித் தொகையையோ பெற்றுக்கொள்ள போவதில்லையென்றும் தமது உறவுகளை தேடித் தருமாறும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பெண்ணொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் நடைபெற்றுவரும் காணாமல் போனோரை கண்டறிவது தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், கடந்த 1996ஆம் ஆண்டு காணாமல் போன சிவராசா என்பவரின் மனைவியான மேரி அன்ரணி ராணி என்பவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழு, சான்றிதழ் பெற விருப்பமா, இறந்த சான்றிதழ் பெற விருப்பமா, நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள விருப்பமா, வாழ்வாதார உதவி வேண்டுமா என பல கேள்விகளை கேட்பது தமக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்த அவர், தமக்கு உறவுகள் வேண்டுமே தவிர உதவிகள் தேவையில்லையென குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய கணவர் காணாமல் போகச் செய்யப்பட்டு இருபது வருடங்கள் கடக்கின்ற போதும் இன்னும் அவர் உயிருடன் இருக்கின்றார் என்ற நினைப்பிலேயே தானும் தனது பிள்ளைகளும் வாழ்ந்து வருகின்ற நிலையில், எவ்வாறு அவர் இறந்துவிட்டதாக மரணச் சான்றிதழைத் தருகிறோம் என கூறுகிறீர்கள் என ஆணைக்குழுவிடம் குறித்த பெண் கேள்வியெழுப்பியுள்ளார்.

இறந்துவிட்டதற்கான பத்திரத்தைக் கோரியோ, நட்ட ஈட்டை பெறவோ அல்லது வாழ்வாதார உதவியை வழங்குமாறு கோரி நாங்கள் உங்களிடம் வரவில்லை என தெரிவித்த குறித்த பெண், எங்கோ இருக்கின்ற எனது கணவரை மீட்டுத் தாருங்கள் எனக் கேட்பதற்கே இங்கு வந்திருக்கின்றேன் என உருக்கமாக தெரிவித்தார்.