கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோருக்கு ஆணவக் கொலைகளில் பங்கில்லையா?
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். அதே போல, தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் செய்ய நினைப்பவர்கள், சாதியத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நிதர்சனம் அப்படி இருக்கிறதா...? உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க. பா.ம.க ஆகிய கட்சிகளின் கையில் ரத்தக் கறை இல்லையா...?
ஆட்சி செய்ய விரும்புபவரிடமிருந்து தொடங்குகிறேன்.
அன்புமணி ராமதாஸ் ஆகிய நான்:
அன்பிற்குரிய அன்புமணி, நீங்கள் இன்னும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. உங்களுக்கு உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் அதிக தொடர்பில்லை என்றாலும், நீங்கள் சார்ந்த கட்சி, தமிழகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் ஆணவக் கொலைகள் சிலவற்றில் ஏதேனும் ஒரு வகையில் பிணைந்திருக்கிறது.அதனால், இயற்கையாக அதன் பிரதிநிதியாக மக்களைச் சந்திக்க இருக்கும் உங்களிடம்தான் உரையாடி ஆக வேண்டும்.
உங்களுக்கு டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டம் நினைவிருக்கிறதா...? உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அப்பா மருத்துவர் ராமதாஸிடம் கேட்டுப் பாருங்கள்... ஒரு வேளை அவருக்கு நினைவிருக்கலாம். அவர் தலைமையில், கோவையின் மையப்பகுதியில் ஒரு ஆடம்பர விடுதியில் நடந்த கூட்டம் அது. ஏறத்தாழ 4 மணி நேரம் நடந்த கூட்டம். ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.
அமைப்பினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. நானும், கோவையைச் சேர்ந்த இன்னொரு ஊடகவியலாளரும் மட்டுமே, கட்சிக்காரர் தோரணையில் சென்றதால், உள்ளே அனுமதிக்கப்பட்டோம். அந்தக் கூட்டத்தில் உங்கள் அப்பா, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் தூவிய வன்ம விதைதான், இப்போது வரிசையாக உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
அமைப்பினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. நானும், கோவையைச் சேர்ந்த இன்னொரு ஊடகவியலாளரும் மட்டுமே, கட்சிக்காரர் தோரணையில் சென்றதால், உள்ளே அனுமதிக்கப்பட்டோம். அந்தக் கூட்டத்தில் உங்கள் அப்பா, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் தூவிய வன்ம விதைதான், இப்போது வரிசையாக உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

தென்மாவட்டத்தைச் சார்ந்த சாதிய அமைப்பின் பிரதிநிதி ஒருவர், ராமதாஸை நோக்கி, “எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். நம்ம வந்தா இடுப்புல துண்டு கட்டுற பயலுவோ... சைக்கிளைத் தள்ளிட்டுப் போற பயலுவோ.... (இன்னும் அச்சில் ஏற்ற முடியாத பல வார்த்தைகள்) எல்லாம், இன்னைக்கு நமக்கு சரிசமமா நிக்கிறானுங்கன்னா... அதுக்கு நீங்கதான் காரணம்... நீங்க கூட்டணி சேர்ந்து தைரியம் கொடுத்தீங்க... இன்னைக்கு நமக்கு எதிராவே வளர்ந்து நிக்கிறாங்க....” என்றார்.
அதற்கு உங்கள் அப்பா, என்ன சொன்னர் தெரியுமா..? “ஆம். தவறு செய்துவிட்டேன். இனி எக்காலத்திலும் அவர்களுடன் கூட்டணி கிடையாது...” என்றார். உங்கள் அப்பாவின் முற்போக்கு முகமூடி கிழிந்து கந்தலாக பரிதாபமாக தொங்கியது அன்று. அரசியலுக்காக, எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிட்டீர்கள், சமூகநீதி கொள்கைகளை எல்லாம் வாக்கிற்காக பலியிட முடிவுசெய்துவிட்டீர்கள் என்பதை அறிந்தேன்.
மாற்றம், முன்னேற்றம், எப்போது நத்தம் காலனி...?
வளர்ச்சியின் நாயகான உங்களைச் சித்தரிக்க விரும்பும் அன்புமணி அவர்களே,

ஒருவேளை இதை நீங்கள் மறந்திருந்தால், அப்போது உங்கள் அருகில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து பா.ம.கவுக்கு வந்தவருமான மருத்துவர் செந்திலிடம் கேளுங்கள். ஆனால், என்ன நடந்தது தெரியுமா? நீங்கள் கடைசி வரை நத்தம் காலனி செல்லவில்லை. நத்தம் காலனிக்கு பக்கத்து ஊரான செல்லாம்கொட்டாய் வரை வந்த நீங்கள், நத்தம் காலனி பகுதிக்கு செல்லவே இல்லை. ஏன்...? அந்த மக்களின் வாக்கை தீட்டாக கருதிவிட்டீர்களா?
“அப்படியெல்லாம் இல்லை... அப்போது அரூர் அருகே என் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது. அது போல் அசம்பாவிதங்களை தவிர்க்கவே நான் செல்லவில்லை...” என்கிறீர்களா...?. ஆனால், நீங்கள் வெற்றி பெற்ற பிறகும், நீங்கள் இதுநாள் வரை செல்லவில்லையே அன்புமணி. அதற்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்...?
உங்கள் உரைகள் வளர்ச்சி குறித்து இருக்கிறது, தனிப்பட்ட முறையில் உங்களுடனான உரையாடல்கள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, ஆனால், பண்பாட்டு தளத்தில் உங்களது கருத்துகள் சூனியமாக இருக்கிறதே..! சங்கரின் படுகொலைக்கு நீங்கள் நேரடியாக காரணமில்லை. ஆனால், “சாதிய வன்முறைகளுக்கு பின் நடந்த தருமபுரி பாராளுமன்ற தேர்தலில், நீங்கள் பெற்ற வெற்றி கொடுத்த தைரியம்தான், இது போன்ற சாதிய தாக்குதல்கள் பரவக் காரணம்” என்றொரு குரல் ஒலிக்கிறதே... அதை உங்களால் கேட்க முடிகிறதா...?
உங்கள் மீதுள்ள களங்கத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்...? குறைந்தபட்சம் நத்தம் காலனி மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களையாவது பெறுங்கள். அதுவே, பொது சமூகம் உங்களை நம்ப போதுமானதாக இருக்கும்!
நாங்கள் பெரியார் பாதையில் நடப்பவர்கள்:

பெரியாரை திராவிட இயக்கங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது என்பதற்கு இது சான்று... பெரியார் மீது யார் என்ன விமர்சனம் வைத்தாலும், அவர் சாதி மறுப்பு கொள்கையில் மிக தெளிவாக இருந்தார். இன்று அவர் வழி வந்த இரண்டு திராவிட கட்சிகளும், அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறதா...?

நேரடியான சாதிய அமைப்புகளை விட நீங்கள்தான் ஆபத்தானவராக இருக்கிறீர்கள். ஆம். அமைதியை, சமத்துவத்தை விரும்பும் பொது சமூகம், சுலபமாக சாதியக் கட்சிகளை எந்தக் குழப்பமுமின்றி தன் இடதுகையால் தள்ளிவிட முடியும். ஆனால், முகமூடி அணிந்திருக்கும் உங்களை என்ன செய்வது...?
"நாங்கள் சமூக நீதிக்காக எவ்வளவு பாடுபட்டு இருக்கிறோம் தெரியுமா...? எதற்கெடுத்தாலும் தி.மு.க வை விமர்சனம் செய்யாதீர்கள், சாதி ஒழிய வெறும் சட்டத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்” என்கிறீர்களா..? ஆம், சரிதான். ஆனால் அந்த மாற்றம் வர என்ன செய்து இருக்கிறீர்கள். எந்த தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையாக இருக்கிறது என்பதை அறிந்து சீட்டு கொடுப்பதில் நீங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா...?
இளவரசன், கோகுல்ராஜ்... இப்போது சங்கர். இளவரசனின் மரணத்தை தற்கொலையென்றாகிவிட்டது. சரி. மிச்சம் உள்ள கோகுல்ராஜ், சங்கர் படுகொலைக்கு எதிராக நீங்கள் நடத்திய போரட்டம் என்ன...? இல்லை, உங்கள் தேர்தல் அறிக்கையிலாவது ஏதேனும் குறிப்பு, அறிவிப்பு இருக்கிறதா....?
உங்கள் கூட்டணியில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தித்த அவதூறுகள் போதும், நீங்கள் எவ்வகையிலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்று வரலாறு பதிவு செய்ய!
ஜெயாவின் கைகளில் குருதி நாற்றம் :

கடந்த நான்காண்டுகளாக ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது குறித்து இதுநாள் வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதவராகத்தான் இருக்கிறார் ஜெயலலிதா.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்பதுக்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடந்ததாக ஒரு புள்ளிவிபரம். ஆனால், இந்த ஆட்சியில் எந்த ஆணவக் கொலையும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்தில் பேசுகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
யாரை ஏமாற்ற எண்ணுகிறது இந்த அரசு...?

கடைசியாக சாமானியன் ஆகிய நமக்கு:
நமது ஆன்மாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து வருகின்றன. நாம் நமக்கே தெரியாமல் ஒரு வக்கிரமான சமூகத்தை உருவாக்கி வருகிறோம். அந்த வக்கிரமான சமூகத்தில்தான் நாளை நம் குழந்தைகள் உலவ விருக்கின்றன. நாளை, குருதி ஆற்றின் கரையோரத்தில் நம் குழந்தைகள் செய்வதறியாது நிற்பதை நாம் விரும்பவில்லை என்றால், சாதிய ஆணவக் கொலைக்கு எதிராக நம் கருத்துகளை ஆழுத்தமாகப் பதிவு செய்வோம்!
- மு. நியாஸ் அகமது