Breaking News

பிள்ளையானுக்கு இன்றும் பிணையில்லை



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான, பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டபோது, பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி இவ் உத்தரவை பிறப்பித்தார்.

பிள்ளையான், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவால் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார். அதற்கு முன்னதாக கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே, பிள்ளையான் கைதுசெய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.