Breaking News

LLRC நூலில் 41ஆவது பக்கத்திலுள்ள புகைப்படத்தில் எனது மகன்! ஜெயக்குமாரி



கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழவின் பரிந்துரைகள் பற்றிய நூலில் 41ஆவது பக்கத்தில் காணப்படுகின்ற புகைப்படத்தில் எனது மகன் பாலேந்திரன் மகிந்தன் காணப்படுகின்றான். எனவே அவனை மீட்டுத்தாருங்கள் என தாய் பாலேந்திரன் ஜெயக்குமாரி காணால் போனோர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பில் நேற்று புதன் கிழமை மூன்றாம் நாள் அமர்வில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் 2009 யூன் மாதம் அயர்லாந்து ஊடகவியலாளர் ரொம் ஹால் என்பரால் அம்பேபுச புனர்வாழ்வு முகாமில் எடுக்கப்பட்டது. அதனை லங்காபுவத் ஊடகம் வெளியிட்டிருந்தது. அப்போது மேஜர் ஹேமன்பெர்ணாட்டோ பொறுப்பாக இருந்துள்ளார். இந்த புகைப்படத்தையே கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய பரிந்துரைகள் அடங்கிய நூலில் 41 பகத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகிறது எனும் விபரத்துடன் போடப்பட்டுள்ளது.

எனவே அம்பேபுச முகாமில் புனர்வாழ்வு பெற்ற மகன் தற்போது எங்கே? அயர்லாந்து ஊடகவியலாளரால் புகைப்படம் எடுக்கும் போது இருந்து மகன் தற்போது எங்கே? என தாய் ஜெயக்குமாரி ஆணைக்குழு முன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது மகன் க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எடுத்துவிட்டு குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்குச் செல்வது வழமை என்றும் அவ்வாறே 2008-12-19 அன்று கிளிநொச்சி கல்மடுநகரில் நாங்கள் இருந்த போது வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்த அவர்.

இறுதியாக மாத்தளன் இரட்டைவாய்க்கால் பகுதியில் பலர் மகனை கண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை எனது மூத்த மகனை திருகோணமலையில் இனந்தெரியாதவர்கள் சுட்டுக்கொலை செய்துவிட்டனர். மற்றொரு மகனும் முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டான். தற்போது மூன்றாவது மகனையும் காணவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

ஜெயக்குமாரியும் கடந்த 2014 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.