ஜூலைக் கலவரத்தின் பின் இந்த ஜூலையே இவ்வாறு நடந்துள்ளது!
1983ம் ஆண்டு இடம்பெற்ற ஜூலைக் கலவரத்தின் பின்னர் புறக்கோட்டை பகுதிகளில் கடைகள் மூடப்பட்டமை, இம் மாதமே என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி திருத்தத்திற்கு அமைய சில்லறை மற்றும் தொகை வர்த்தகப் பொருட்களுக்கு வரி அறவிடப்படும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இம் மாதம் புறக்கோட்டை பகுதியில் கடைகள் மூடப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் அப் பகுதிகளுக்கு சென்று இவ்வாறு கடைகளை மூட வேண்டாம் எனக் கோரினர் எனவும் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனையையே அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் எனவும், அதன்படி பெறுமதி சேர் வரி 11 வீதமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் நிறைவேற்றப்பட்ட குறித்த யோசனையில், சில்லறை மற்றும் தொகை வர்த்தக பொருட்களுக்கு பெறுமதி சேர் வரியை அதிகரிப்பது குறித்து காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்துக்கு உள்ள நிதி அதிகாரத்தை நிதி அமைச்சரால் மனம்போன போக்கில் தன் கைகளில் இருக்கும் அதிகாரம் என எண்ணி செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என, பந்துல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.








