யாழ். பல்கலைக்கழகத்திற்கு இராணுவ பாதுகாப்பு அவசியமில்லை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே, அங்கு இராணுவப் பாதுகாப்பு போட வேண்டிய அவசியமில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலை அசம்பாவிதம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்காக பல்கலைக்கழகத்தில் இராணுவப் பாதுகாப்பு போட வேண்டிய அவசியமில்லை.
பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தெற்கின் சில தரப்பினர் இந்தப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலோ அல்லது அதன் வெளியிலோ இடம்பெறவில்லை- என்றார்.








