Breaking News

அதிகார பகிர்வை, ஒரு நாட்டை பிளவுபடுத்தும் அலகாக கூறுவது தவறு: சுவிஸ்



அதிகார பகிர்வை, ஒரு நாட்டை பிளவுபடுத்தும் அலகாக கூறுவது தவறானது. உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்ட சமஷ்டி முறையிலான நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி நாடாக அதிகார பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருதுவதில்லை என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் தெரிவித்தார்.

அத்துடன், சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் – சுவிஸர்லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபவத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

போரின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால், கடந்த கால மோதல்களுக்கு தீர்வு காண அவை போதுமானதல்ல. மாறாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதுவே, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தற்போதுள்ள இலக்குகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.