"அமெரிக்க போர் கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்"
கொரிய தீபகற்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை "மூழ்கடிக்க" வட கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் போர் கப்பலான கார்ல் வின்சனை "ஒரே ஒரு அடியில் மூழ்கடித்துவிட முடியும்" என்ற எச்சரிக்கை நோடாங் ஷின்முன் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது
வின்சன் கப்பலை முதன்மையாக கொண்டு சண்டைக்கு தயாராக இருக்கும் அமெரிக்க ராணுவ படை, இந்த வாரத்தில் தீபகற்பத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வட கொரியாவின் அணு சோதனைகள் குறித்து அமெரிக்கா காத்து வந்த "மூலோபாய அமைதி" முடிவடைந்துவிட்டது என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியில் அதிபர் டொனால்ட் டிரம்பால் அந்த போர்கப்பல் அனுப்பப்பட்டது.
வட கொரியாவின் தோல்வியடைந்த ஏவுகணை சோதனை மற்றும் சமீபத்திய ஆயுதங்களை வெளிக்காட்டிய, பிரமிக்க வைக்கும் ராணுவ அணி வகுப்பு ஆகியவற்றிற்கு பிறகு பதற்றங்கள் அதிகரித்தன.
ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் செய்தித்தாளான நோடாங் ஷின்முனில் ஞாயிறன்று வெளிவந்த இந்த செய்திக்கு பிறகு, கிம் ஜாங் உன், பன்றி பண்ணையை பார்வையிடுவது குறித்த விரிவான செய்தியும் வெளிவந்தது.
"எங்களின் புரட்சிப் படைகள் அமெரிக்க அணு சக்தி விமானம் தாங்கியை ஒரே அடியில் வீழ்த்த தயாராக உள்ளது என்றும், " பெரிய விலங்கு" என்று வட கொரியாவால் கருதப்படும் அதனை அழிப்பது தங்களின் ராணுவப் படையின் வலிமையை காட்டுவதற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமையும்" , என்று அப்பத்திரிகை கூறியது
இதே எச்சரிக்கையை மாநில செய்தித்தாளான `மிஞ்சு ஜோசன்` பத்திரிகையும் எதிரொலித்துள்ளது.
"எதிரிகள் திரும்ப எழ முடியாத அளவு ராணுவம் இரக்கமற்ற அடியை கொடுக்கும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வட கொரிய பதற்றம் குறித்த காலநிலை:
ஏப்ரல் 8: வட கொரியாவிற்கு எதிரான தாக்குதல் கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி செல்ல, அமெரிக்க ராணுவம் ஆணையிட்டது.
ஏப்ரல் 11: சக்திவாய்ந்த ஆயுதங்கள் கொண்டு தன்னை காத்து கொள்ளப்போவதாக வட கொரியா தெரிவித்தது.
ஏப்ரல் 15: வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105ஆவது பிறந்த நாளையொட்டி, ஏவுகணைகளுடன் பிரமாண்ட ராணுவ அணி வகுப்பு ஒன்றை வட கொரியா நடத்தியது.
அதே சமயம் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தென் கொரியாவிற்கு வருகை புரிந்தார்.
ஏப்ரல் 16: ராக்கெட் சோதனை ஒன்றை நடத்தி தோல்வியுற்றது வட கொரியா.
ஏப்ரல் 17: வட கொரியா, வாராவாரம் ஏவுகணை சோதனையை நடத்தும் என மூத்த வட கொரிய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார் மேலும் டொனால்ட் டிரம்பை "சோதிக்க வேண்டாம்" என வடகொரியாவை எச்சரித்தார் பென்ஸ்.
ஏப்ரல் 18: வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்க கப்பற்படை வட கொரியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், உண்மையில் அவை வட கொரியா நோக்கிச் செல்லவில்லை என்று தெரிய வந்தது.








