Breaking News

2017 ல் தமிழ் மக்களுக்கு என்ன காத்திருக்கிறது? – நிலாந்தன்

கடந்தவாரம் தமிழரசுக் கட்சியின் தலைவர்
மாவை சேனாதிராசா அம்பாறை மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். அங்கே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பங்கு பற்றிய அவரிடம் பொதுமக்கள் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். இக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாத அவர் ஒரு கட்டத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

உங்களிடம் இருப்பதை விடக் கூடுதலான கேள்விகள் என்னிடம் உண்டு என்று.

மாவை சேனாதிராசா யார்? தமிழரசுக் கட்சியின் தலைவர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அடிச்சட்டமாக உள்ள ஒப்பீட்டளவில் பெரிய கட்சி அது. யாப்பு உருவாக்கப் பணிகளில் அரசாங்கத்தோடு நெருங்கிச் செயற்படும் ஒரு கட்சியும் அது. யாப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவிலும், உப குழுக்களிலும் அக் கட்சியைச் சேர்ந்தவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். அதை எப்படி விளங்கிக் கொள்வது?

💥✨மேற்கண்ட கேள்விகளை அவர் யாரிடம் கேட்க வேண்டும்? தனது கட்சியைச் சேர்ந்தவர்களிடமா? அல்லது அரசாங்கத்திடமா? அல்லது வெளித்தரப்புக்களிடமா? யாப்பு உருவாக்கப் பணிகளில் ஈடுபடும் அவரது கட்சிக்காரரிடம் அவர் கேள்விகளைக் கேட்பதில்லையா? அல்லது கேட்க முடியாத நிலையில் இருக்கிறாரா? அல்லது அவருக்கும் கூட அது பற்றிய ரகசியங்கள் மறைக்கப்படுகின்றனவா? அல்லது அக் கேள்விகளுக்கான விடைகள் அவருக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றை தமிழ் மக்களிடம் வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் இருக்கிறாரா?💥✨

இவ்வாறான விடையற்ற கேள்விகளோடுதான் கடந்த ஆண்டு கடந்து சென்றிருக்கின்றது. ஒரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இனப் பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த ஒரு ஆண்டு பிறப்பதற்கு ஒரு கிழமைக்கு முன்னதான நிலைமை அது. இன்னும் இரண்டு கிழமைகளுக்குள் அதாவது வரும் 9ஆம் 10 ஆம் திகதிகளில் உத்தேச அரசியல் யாப்புக்கான யோசனைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று ஓர் ஊகம் பரவலாக உள்ளது.

💥✨கூட்டமைப்பினர் தமது மக்களுக்கு வாக்களித்த படி சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட ஒரு சமஷ்டித் தீர்வுக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைந்தளவே தெரிகின்றன. தமிழ் மக்களின் தாயக ஒருமைப்பாட்டைப் பேணும் வடக்குக் கிழக்கு இணைப்பும் இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று யாப்பு உருவாக்கப் பணிகளில் ஈடுபடும் சுமந்திரன் ஏற்கனவே கூறிவிட்டார். இத்தகையதோர் பின்னணியில் தனது வாக்காளர்களுக்கு கூட்டமைப்பு எதைக் கூறப்போகிறது?💥✨

அவர்கள் எதைக்கூறப் போகிறார்களோ தெரியாது. ஆனால் ஒரு புதிய யாப்பு வாக்கெடுப்புக்கு விடப்படுமாக இருந்தால் இந்த ஆண்டு தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு தேர்தல் ஆண்டாகவும் தீர்மானகரமான ஆண்டாகவும் அமையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் தெரிகின்றன. 💥✨அது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல கூட்டமைப்புக்கும் ஒரு தீர்மானகரமான ஆண்டாகவே இருக்கும். அது மட்டுமல்ல விக்னேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் கூட அது ஓரு தீர்மானகரமான ஆண்டாகவே அமையும்.💥✨

புதிய யாப்பில் தமிழ் மக்களின் உரிமைகள் போதியளவு பாதுகாக்கப்படவில்லை என்று சொன்னால் அது கூட்டமைப்பு ஏற்கனவே பிரகடனப்படுத்திய ஒரு ராஜதந்திரப் போரில் அக் கட்சியானது தோல்வியடைந்து விட்டதாகவே கருதப்படும். அப்படி ஒரு நிலைமை வந்தால் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு கட்சியைப் பற்றியோ அல்லது தலைமையைப் பற்றியோ சிந்திக்க வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுவார்கள் அல்லது அவ்வாறு தமிழ் மக்களை சிந்திக்குமாறு தூண்டவல்ல ஒரு தலைமைக்கான தேவை அதிகம் உணரப்படலாம். அப்படி ஒரு நிலைமை தோன்றினால் அதைக் கையாள்வதற்கு பொருத்தமானவராக விக்னேஸ்வரன் ஒருவரே துலக்கமாகத் தெரிகிறார். ஜனவசியம் மிக்கவராகவும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராகவும் காணப்படும் அவர் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட்டமைப்பில் அதிருப்தியுற்ற பலருக்கும் உண்டு. ஆனால் வின்னேஸ்வரன் அப்படி ஒரு தலைமையை வழங்கத் தயாரா?

💥✨இன்று வரையிலுமான அவருடைய செயற்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்குவார் என்று திட்டவட்டமாக கூற முடியாத ஒரு நிலைமையே உண்டு. அவர் கட்சிக்குள் ஒரு கலகக்காரனாகத் தோன்றுகிறார். இக்கலகம் காரணமாக அவர் தனது மேட்டுக்குடி உறவுகளை பகைத்துக் கொண்டும் விட்டார். இக்கலகம் காரணமாகவே அவர் புலம்பெயர்ந்த தமிழர்களால் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்படும் ஒரு தலைவராகவும் எழுச்சி பெற்றுள்ளார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க முற்படும் விக்னேஸ்வரன் 2009 மேக்குப் பின் தமிழ் தேசிய நெருப்பை அணைய விடாமல் பாதுகாத்தவர்களுள் முக்கியமான ஒருவராக மேலெழுந்துள்ளார்.💥✨

ஆனால், அவர் இது வரையிலும் நிறைவேற்றிய தீர்மானங்களையும் அவருடைய உரைகளையும் நேர்காணல்களையும் ஒரு புறம் தொகுத்து வைத்துக் கொண்டு இன்னொருபுறம் இது வரையிலுமான அவரது செயற்பாடுகளோடு ஒப்பிட்டால் ஒரு வித போதாமையைத்தான் உணர முடியும். அவர் தன்னால் முடியாத தீவிர அரசியலை பேசிக்கொண்ருக்கிறாரா? என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. ஒரு மாற்றுத் தலைமையைக் குறித்த அதிகளவு பிரகாசமான நம்பிக்கைகளை அவர்தான் கட்டி எழுப்பினார். ஆனால் அந்த நம்பிக்கைகளை செயலுருப்படுத்த முடியாதவராகவே இன்று வரையிலும் தோன்றுகிறார்.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட முத்தமிழ் விழாவில் அவர் உரையாற்றிய பொழுது தமிழ் மக்கள் பேரவையானது ஒரு கட்சியாக மாறப்போவதில்லை என்று தனக்கு தொடக்கத்தில் கூறப்பட்டதை நினைவு கூர்ந்திருந்தார். தமிழ் மக்கள் பேரவை தொடங்கப்பட்ட புதிதில் அதன் ஏற்பாட்டாளர்கள் விக்கேஸ்வரனுக்கு அவ்வாறு உறுதி கூறியதாக ஒரு தகவல் உண்டு. அதே சமயம் பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட கட்சித் தலைவர்களுக்கு வேறு விதமாக கூறப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதாவது தேவை ஏற்படின் பேரவையானது நேரடியாக அரசியலில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டதாம். பேரவைக்குள் இணையும் பொழுது அது ஒரு மாற்று அணியாக வராது என்று நம்பித்தான் விக்னேஸ்வரன் அதில் இணைந்திருக்கிறார். அந்த நம்பிக்கையை அவர் தொடர்ந்து பேணுகிறார் என்பதைத்தான் மட்டக்களப்பில் வைத்து முத்தமிழ் விழாவில் மீள உறுதிப்படுத்தினார். இனிமேலும் அவர் அந்த நம்பிக்கையை காவப்பேகிறாரா?

முத்தமிழ் விழாவில் வைத்து மட்டுமல்ல அண்மையில் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவிலும்; ஏறக்குறைய அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதத்தில்தான் உரையாற்றியிருந்தார். ஆயின் இனிவரும் வாரங்களில் ஒரு தீர்வு யோசனை முன்வைக்கப்பட்டால் அது கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணானதாக காணப்பட்டால் விக்னேஸ்வரன் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார்? அவர் எடுக்கப்போகும் முடிவில் தான் தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் தங்கி இருக்கின்றது.

தனது கட்சித் தலைமைக்கு முரணாக அவர் தெரிவித்து வரும் கருத்துக்களும் அவருடைய செயற்பாடுகளும் ஒரு மாற்று அரசியலை நோக்கியே இட்டுச் செல்கின்றன. ஆனால் கட்சித் தலைமைக்கு எதிராக மாற்றுத் தலைமையை கட்டியெழுப்பப் போவதில்லை என்று அவர் தொடர்ந்தும் கூறி வருகிறார். இதை எப்படி எடுத்துக் கொள்வது? தான் தலைமை தாங்கத் தயாரற்ற கொள்கைகளை அவர் ஏன் முன்வைக்கின்றார்? சில சமயம் இது அவருடைய தலைமைத்துவப் பண்பிலுள்ள போதாமைகளால் ஏற்பட்ட ஒன்றா? ஏற்கனவே கடந்த மூன்றாண்டு கால வடமாகாண சபையின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் அவரை ஒரு சிறந்த நிர்வாகி இல்லை என்று கூறுகிறார்கள்.

அவுஸ்ரேலியாவில் இருக்கும் அவருக்கு நெருக்கமான ஒருவரால் அவர் தொலைவில் இருந்து இயக்கப்படுவதாக அவர் மீது விமர்சனங்கள் உண்டு. அது மட்டுமல்ல வடமாகாண சபை அமைச்சர்கள் செய்ததாகக் கூறப்படும் ஊழல்களுக்கு எதிராக ஒரு விசாரணைக் குழுவை அவர் நியமித்திருந்தார். அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ் மக்கள் ஏற்கனவே பல விசாரணை ஆணைக்குழுக்களைக் கண்டுவிட்டார்கள். தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கண்துடைப்பு ஆணைக்குழுக்கள் அவை. விக்னேஸ்வரனின் ஆணைக்குழுவும் அந்தப் பட்டியலுக்குள் சேர்ந்து விடுமா என்ற ஒரு கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.

இவை யாவும் விக்னேஸ்வரனின் நிர்வாகத் திறன் மற்றும் தலைமைத்துவப் பண்பு தொடர்பான விமர்சனங்கள்;. இந்த எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழ்த் தேசிய நெருப்பை அறிந்தோ அறியாமலோ விளங்கியோ விளங்காமலோ கடந்த சில ஆண்டுகளாக அணைய விடாது பேணிப் பாதுகாத்த ஒரு பெருஞ் செயலை அவர் செய்திருக்கிறார். ஆனால் அதை அவர் ஒரு அழுத்தப் பிரயோகி என்ற ஒரு நிலையிலிருந்து மேற்கொண்டாரா? அல்லது ஒரு மாற்று எதிரணிக்கான தளத்தைக் கட்டமைத்தல் என்ற அடிப்படையில் மேற்கொண்டாரா? என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரிய வந்துவிடும்.

ஓர் அழுத்தப் பிரயோகியாக விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் பேரவையும் இது வரை காலமும் செயற்பட்டதன் விளைவுகளை இனப்பிரச்சினைக்கான தீர்வில் காண முடியும். தமிழ் மக்கள் பேரவையானது தீர்வு முன்மொழிவு ஒன்றை ஏற்கனவே வைத்து விட்டது. ஒரு எழுக தமிழையும் ஏற்கனவே நடத்திக் காட்டி விட்டது. விரைவில் கிழக்கிலும் இரண்டாவது எழுக தமிழ் நிகழவிருக்கிறது. இத்தகையதோர் பின்னணியில் பேரவையின் முன்மொழிவுகளை கவனத்தில் எடுக்காது ஒரு குறைத் தீர்வை அரசாங்கமும் அதன் யாப்பு உருவாக்கப்பங்காளியான கூட்டமைப்பும் முன்வைக்;குமாக இருந்தால் அதற்கு எதிராக போராட வேண்டிய பொறுப்பு பேரவைக்கு உண்டு.

அதற்கு தலைமை தாங்கும் விக்னேஸ்வரனுக்கும் உண்டு. எனவே தமிழ் மக்களின் தலை விதியை தீர்மானிக்கப் போகும் ஒரு தருணத்தில் மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் தலைவர்கள் அந்த ஆணைக்கு மாறாகச் செயற்படும் பொழுது தொடர்ந்தும் அழுத்தக் குழுவாக இருப்பதால் பயன் ஏதும் கிடைக்கப்போவதில்லை. அது ஒரு வழுவழுத்த எதிர்ப்பாகவே இருக்கும். கோட்பாட்டு தெளிவற்ற பாதி எதிர்ப்பு எனப்படுவது இன்னொரு விதத்தில் பாதிச் சமாளிப்பும்தான்.

வரவிருக்கும் யாப்பே தமிழ் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்படும் முதலாவது யாப்பு என்று கடந்த ஆண்டு மன்னாரில் வைத்து சம்பந்தன் தெரிவித்திருந்தார். அவ்வாறு தமிழ் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பில் உள்ளடக்கப்படவிருக்கும் அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்களும் சம்மதம் தெரிவித்து வாக்களிப்பார்களாக இருந்தால் தமிழ் மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று சீனாவுக்கு சிநேக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. சீனப் பிரதானிகள், ராஜதந்திரிகள் போன்றோரை சந்தித்திருக்கிறது. யாப்புருவாக்கம் பற்றியும் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றியும் அங்கு உரையாடப்பட்டிருக்கிறது. அந்த உரையாடல்களில் பங்கு பற்றிய அந்த உரையாடல்களை உற்றுக் கவனித்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தரும் தகல்களை வைத்துப் பார்த்தால் நிலைமை நல்லாய் இல்லை என்றே தெரிகிறது.

ஆனால் விக்னேஸ்வரனும் உட்பட சம்பந்தன், சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்கள் வரும் ஆண்டைக் குறித்து நம்பிக்கையூட்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள்? கேள்விகளோடு பிறந்திருக்கின்றது ஒரு புதிய ஆண்டு.

முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்