சம்பந்தன் என்னுடன் பேசுவதற்கு தயங்குவதேன்?-மனோ கேள்வி
யுத்த காலத்தில் தலைநகரில் தமிழ்
மக்களின் பிரச்சினைகளுக்காக தைரியமாக குரல் கொடுத்த அரசியல்வாதியான மனோ கணேசன் இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக பணிபுரிகின்றார். அன்று காணாமல் போன அல்லது கடத்தல் சம்பவம் இடம்பெற்றால் பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு முன்னர் இவரிடமே கூறும் வழக்கம் இருந்தது. வீதிகளில் இறங்கி போராடியவர். காணாமல் போதல், கடத்தல்கள் என்பனவற்றுக்கு எதிராகக்குரல் கொடுத்தமையின் காரணமாக அமெரிக்க அரசாங்கத்தினால் சுதந்திர காவலர் என்ற விருதும் வழங்கப்பட்டவர்.
அத்தகைய அரசியல்வாதியின் இன்றைய நிலை என்ன? அவர் திருப்திகரமாக நல்லாட்சி அரசாங்கத்தில் கடமையாற்றுகின்றாரா? தென்னிலங்கை தமிழ் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை இவரால் ஏற்படுத்த முடியுமா? வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெறுவதில் எவ்வாறான பங்களிப்பை அவரால் செலுத்த முடியும் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார் அமைச்சர் மனோ கணேசன்.
Q:- நீங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக பாரிய அர்ப்பணிப்பை செய்த ஒருவர். யுத்த காலத்தில் கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்களுக்கு எதிராக போராடியவர். அந்த வகையில் உங்களுக்கு இந்த அரசாங்கத்தில் கிடைத்துள்ள இடம் தொடர்பில் திருப்தி அடைகின்றீர்களா?
A: நிச்சயமாக திருப்தியுடனேயே இருக்கின்றேன். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. நான் எந்தத் துறையில் எந்த விடயங்களில் ஆர்வமாக செயற்பட்டேனா, அதே துறையிலேயே நான் இன்று இந்த அரசாங்கத்தின் சார்பில் செயற்படுகின்றேன். இந்த நாட்டில் வாழும் இனங்கள், மதங்கள், மொழிகளுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் சமத்துவம் என்ற அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது இலட்சியமாகும். அந்தப் பணியை நான் தற்போது அமைச்சரவை அதிகாரத்துடன் செய்து கொண்டிருக்கின்றேன்.
ஒன்றை நீங்கள் மறந்துவிட வேண்டாம். நான் இந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் எம்.பி.யாக இருக்கவில்லை.
2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கண்டியில் போட்டியிட்டபோது வெற்றிபெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதில் நான் தோல்வியடைந்ததாக கூற முடியாது. எனினும் வெற்றிபெற முடியவில்லை. அதன் பின்னர் மாகாண சபை உறுப்பினராகவே இருந்தேன். அந்த வகையில் இலங்கை வரலாற்றில் மாகாண சபையிலிருந்து அமைச்சரவைக்கு சென்ற ஒரேயொரு அரசியல்வாதி நான்தான். எனவே சாதகமான விடயங்களை பார்க்க வேண்டும். பாதகமான விடயங்களையும் பார்க்க வேண்டும்.
Q:- அப்படியெனில் பாதகமான விடயங்கள் உள்ளனவா?
A: இல்லை. உங்கள் கேள்வியில் பாதகமான விஷயத்தை தேடும் ஒரு தொனி தென்பட்டது. அதை தான் கூறினேன்.
Q:- மனோ கணேசன் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்களை கூற முடியுமா?
A: ஒப்பிட்டளவில் கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சி நன்றாக இருக்கின்றது என்றே கூறுவேன். கடந்த ஆட்சியை காட்டாட்சி என்று வர்ணிக்கின்றோம். இந்த ஆட்சியை நல்லாட்சி என்று வர்ணிக்கின்றேன். நல்லாட்சி என்றால் அதிசிறந்த நல்லாட்சி என்று அர்த்தமல்ல. உலகத்தில் அதி சிறந்தது என்று எதுவும் கிடையாது. ஒப்பிட்டுத்தான் பார்க்க வேண்டும். அன்றையதை விட இன்று நன்றாக இருக்கின்றது. இன்றையதை விட நாளைய ஆட்சி நன்றாக இருக்கலாம். அல்லது மோசமாகவும் போகலாம். ஒப்பீட்டு ரீதியிலேயே நாம் இவற்றை நோக்கவேண்டும். அதனால் நான் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
Q:- நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான உங்களது சுய மதிப்பீடு என்ன?
A: இன்று சட்டத்தின் ஆட்சி நிலவுகின்றது. பொலிஸ் துறையில் ஒரு சுயாதீனம் தெரிகிறது. நீதித்துறையில் சுயாதீனம் உள்ளது. கடந்த ஆட்சியில் இருந்த நிலைமைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது நிலைமை முன்னேறி உள்ளது. இங்கு ஒப்பிடுதல் மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது. உதாரணமாக அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை எடுத்து பாருங்கள். நாங்கள் பதவிக்கு வரும்போது சுமார் 200 அரசியல் கைதிகள் இருந்தனர். ஆனால் இன்று சுமார் 100 பேர் வரை உள்ளனர். ஏனையோர் ஏதோவொரு வழியில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யுத்த காலத்தில் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக வழங்கப்பட்டு விட்டன என்று கூற முடியாது. ஆனால் கணிசமான தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அண்மையில் கூட மயிலிட்டி துறைமுக பகுதியை விடுவிக்கப்பட்டது. இந்த விடயத்தில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. காணாமல்போனோர் விவகாரத்தில் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கும் நோக்கில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறுபுறம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. இந்த துறையில் நான் என்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றேன்.
Q:- இவற்றைக் கொண்டு உங்களால் திருப்தியடைய முடியுமா?
A: நான் எப்போதும், எந்த விஷயத்திலும் இலேசில் திருப்தியடைய மாட்டேன். எனது அரசியல் வாழ்வில் நான் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. இங்கேயும் கவனியுங்கள், ஒப்பிடுதலையே நான் செய்கிறேன். நான் நினைத்திருந்தால் மஹிந்த ராஜபக் ஷவின் அரசில் 2005 யிலேயே இணைந்திருக்கலாம். 2010ல் ஒரு தேசிய பட்டியலை வாங்கிக்கொண்டு இணைந்திருக்க்லாம். நல்ல விலைக்கு போயிருப்பேன். (சிரிக்கிறார்).
ஆனால் மகிந்த அரசில் தமிழ் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான எந்தவொரு நியாயமான காரணங்களும் இருக்கவில்லை. அதனால் வெளியிலிருந்து போராடினேன். தற்போது உள்ளே இருந்து போராடுகின்றேன்.
Q:- தொடர்ந்து போராட்டம்தானா?
A: ஆம். அதனை மறுப்பதற்கில்லை. எப்போதும் நான் ஒரு போராளிதான். என் ஆயுதம் ஜனநாயகம். போராட்டம் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை தருகிறது. காரணம் எனது போராட்டங்கள் நியாயத்தை நோக்கியதாகவே இருக்கின்றன.
Q:- எதிர்க்கட்சியில் இருந்து போராடுவதும், ஆளும் கட்சியிலிருந்து உள்ளக ரீதியில் போராடுவதும் எவ்வாறு இருக்கின்றது?
A: எதிர்க்கட்சியிலிருந்து போராடும் போது அது பளிச்சென தெரிகிறது. மக்களையும் சென்றடைகிறது. ஆனால் ஆளும் கட்சியிலிருந்து போராடும்போது அது அவ்வளவாக தெரியாமல் போய்விடும். ஆனால், இந்த “தெரிகிறது..,தெரியாமலிருக்கிறது” என்பவைகளைபற்றி நான் அவ்வளவாக அலட்டிகொள்வதில்லை. என்மேல் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் நான் எங்கிருந்து போராடினாலும், மனோ கணேசன் சரியான திசையைதான் நோக்கி நகர்கின்றார் என மக்கள் நம்புகின்றனர்.
Q:- ஜனநாயகம் குறித்து பேசி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான தேர்தலை நடத்தாமல் இருக்கிறது. இதற்கு எவ்வாறு பதிலளிக்கப் போகின்றீர்கள்?
A: ஒரு விடயத்தை முதன்முதலாக உங்கள் நாளேடு மூலமாக நாட்டுக்கு அறிவிக்கவேண்டும். நவம்பர் மாதம் இறுதி வாரத்திலே நாடு முழுவதும் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும். அதற்கான முடிவு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சிக் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டு விட்டது.
இந்த தேர்தல் தாமதம் அடைந்தமைக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மூலத்தில் இருக்கக்கூடிய குளறுபடிகளே பிரதான காரணமாகும். அந்தக் குளறுபடிகளை கடந்த அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த அமைச்சரான பஷில் ராஜபக் ஷவே உருவாக்கினார்.
அதில் குறிப்பாக சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்டிருந்தது. மிக மோசமான முறையில் தொகுதி வட்டார எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. எனவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு தமது பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படும் வகையில் திருத்தங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதற்காகதான் இந்த தாமதம் நிலவுகின்றது. எங்களது அந்த இடைவிடாத உள்ளகப் போராட்டத்தின் காரணமாக சட்டத்தின் குளறுபடிகளும், எல்லை நிர்ணய குளறுபடிகளும் மிக பெரும்பாலும் சீர்செய்யப்பட்டுள்ளன.
Q:- அப்படியாயின் வரப்போகும் உள்ளூராட்சி தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இருக்காதா?
A: பஷில் ராஜபக் ஷ ஏற்பாடு செய்த அந்த சட்ட மூலத்தில் இருந்த குளறுபடிகள் உடைத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை நாங்கள் இன்று பேசி முடித்துவிட்டோம். எமது முடிவுகளின்படி சட்டமூல திருத்தங்கள் சட்டமாதிபரால் தயாரிக்கப்பட்டு அடுத்தவாரம் அமைச்சரவைக்கு வழங்கப்படும். அமைச்சரவை அதனை ஏற்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும்.
Q:- தற்போதைய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது என மஹிந்த அணியினர் கூறி வருகின்றனர். இதற்கு என்ன பதில்?
A: நீடிக்காது என்பது மஹிந்த ராஜபக் ஷவின் கனவு. அது அவரது ஆசை. அவரது பேராசை என்றும் கூறலாம். ஆனால் அரசாங்கம் எந்த சிக்கலுமின்றி நீடிக்கும். ஏனெனில் ஒன்றாய் இருக்கும்வரைதான் வாழ்வு என்று இங்கே உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.
Q:- அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வே முக்கியத்துவம்மிக்கது. இதில் தற்போது என்ன நடக்கின்றது என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு கூற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. தயவு செய்து உண்மையை கூறுங்கள்...?
A: அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் அரசாங்கம் மட்டும் ஈடுபடவில்லை. மாறாக இன்று முழு நாடும் அதில் ஈடுபட்டுள்ளது. முழுப் பாராளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு பிரதான வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். அந்த 21 பேர் கொண்ட குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் உள்ளடங்குகின்றனர்.
சம்பந்தன், அநுரகுமார, டக்ளஸ் தேவானந்தா, தினேஷ் குணவர்த்தன ஆகிய எதிரணி தலைவர்களும், ஹக்கீம், ரிசாத், சம்பிக்க ரணவக்க, நிமால் சிறிபால டி சில்வா, மனோ கணேசன் என்ற ஆளும் அணி கட்சி தலைவர்களும் உள்ளனர்.
1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ கொண்டு வந்த அரசிலயமைப்பு உருவாக்கத்திலும், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். கொண்டு வந்த அரசியலமைப்பு உருவாக்கத்திலும் காணப்படாத பண்பு இம்முறை உருவாக்கப்படும் அரசியலமைப்பில் காணப்படுகிறது. ஜனநாயக பாரம்பரிய முறைமை பின்பற்றப்படுகிறது. சிறிமாவின் காலத்தில் சமையலறை அமைச்சரவையை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப்பினை கொண்டு வந்தார். ஜே.ஆர். தனது நண்பர்களை வைத்துக் கொண்டே அரசியலமைப்பனை கொண்டு வந்தார்.
இன்று அப்படியல்ல. ஜனநாயகரீதியாக முழு நாட்டு மக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டு அரசியலமைப்பு தயாரிக்கப்படுகிறது. தற்போது எமது வழிநடத்தல் குழுவுக்கு வந்த யோசனைகளை எல்லாம் தொகுத்துக் கொண்டிருக்கின்றோம். வழிநடத்தல் குழுவுக்கு முடிவுகள் எடுக்கும் அதிகாரங்கள் இல்லை. ஆனால் வந்த யோசனைகளை தொகுத்து அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு கொடுப்போம். அங்கேதான் இறுதிமுடிவு எடுக்கப்படும்.
Q:- அரசியல் தீர்வு தொடர்பில் எவ்வாறான நிலைமை காணப்படுகிறது.
A: இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக நான் ஒரு விடயத்தை கூறி விட வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணியின், மனோ கணேசனின் இது தொடர்பான நிலைப்பாடுகள் மிகவும் தெளிவானவை. அதாவது வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் உடன்பாடு பெறப்பட வேண்டும். சமஷ்டி முறைமையிலான, மதசார்பற்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தத்தை தாண்டிய அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும்.
தேர்தல் முறையானது சிறுபான்மை மக்கள் இன்று பெற்றுக் கொண்டிருக்கும் பிரதிநிதித்துவங்கள் சற்றும் குறையாமல் அதனை இன்னும் வலுவாக்கும் வகையில் அமைய வேண்டும். ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்படுவதில் எமக்கு உடன்பாடு இல்லை. அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஆனால் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படக்கூடிய ஜனாதிபதியொருவர் இருக்க வேண்டும். அது ஆறு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சிறுபான்மை மக்களுக்கு வாக்குபலத்தினூடாக பேரம் பேசும் சக்தியை கொடுக்கும்.
அதேநேரம் சிறுபான்மை இனத்தை சார்ந்த ஒருவர் உப ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடு. இது எனது தெளிவான நிலைப்பாடு என்பதனை தெரிவிக்கின்றேன். இதில் சில விடயங்களை வழிநடத்தல் குழுவுக்கு முன்வைத்துள்ளோம். சில விடயங்களை முன்வைக்கவில்லை.
காரணம் வழிநடத்தல் குழுவில் ஒரு யதார்த்தம் இருக்கின்றது. அந்த யதார்த்தம் என்னவெனில் தற்போது வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு சாத்தியம் கிடையாது. சமஷ்டிக்கு சாத்தியமில்லை. மதசார்பின்மை என்ற கொள்கைக்கு சாத்தியம் கிடையாது. இந்த யதார்த்தத்திற்கும், எமது எதிர்பார்ப்புக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. இந்த உண்மையைதான் நான் உரத்து கூறுகின்றேன். இந்த யதார்த்தத்தை தமிழ் மக்களுக்கு தெளிவாக எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. சொன்னால்தான் தமிழ் மக்கள் உண்மையை தெரிந்து கொள்வார்கள்.
உங்கள் கேள்வியில் மக்களின் எதிர்பார்ப்பு தொக்கி நிற்கிறது. இது நியாயமான கேள்விதான். மக்கள் எழுப்பும் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கின்றீர்கள். அதனால்தான் மக்கள் தெளிவில்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக உண்மையை கூறுகின்றேன். அரசியலமைப்பு இன்னும் வரவில்லை. அது வருமா, வராதா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டுவிட்டது. எனினும் இன்றைய யதார்த்தத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுவதில் தயக்கம் இருக்கக்கூடாது.
காரணம் இந்த முறைதான் நாடு முழுக்க சென்று மக்கள் கருத்துகளை பெற்றுளோம். இந்த முறைதான் இந்த அரசியலமைப்பு செயற்பாட்டில் மக்களின் பங்களிப்பு அதிகமாகவுள்ளது என்று உரக்க கூறி நாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த தம்பட்டம், ஏன் தற்போது, மக்களிடம் உள்ளே இருக்கும் உண்மையை எடுத்து கூறுவதில், என்னை தவிர, ஏனையோரிடம் நின்று போய்விட்டது என்று தெரியவில்லை.
திங்கட்கிழமை தொடரும்...(நன்றி வீரகேசரி)