Breaking News

அந்திம காலத்திலாவது இதயசுத்தியோடு செயற்படுவாரா? சிவகரன் காட்டம்

அந்திம காலத்திற்கு வந்துவிட்டிர்கள் இனியாவது
இதயசுத்தியோடு செயலாற்றுங்கள் என இரா சம்பந்தனுக்கு மிக நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அவர்கள்.

இவரது கடிதம் இணைக்கப்பட்டுள்ளது


கௌரவ இராசம்மந்தன்அவர்கள்
தலைவர்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு


ஓய்யாரக் கொண்டையிலே தாளம்பூவாம் உள்ளே இருப்பது......???

அடக்குமுறைக்குட்பட்ட தேசிய இனம் விடுதலைக்காக போராடி சர்வதேச சதிவலைக்குள் சிக்குண்டு சிதைவடைந்த தமிழினத்தை சீர்தூக்கி நேரிய வழியில் நிலைப்படுத்த எவரும் இன்றி தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித்தவிக்கின்றது தமிழினம்.

தமிழ்த்தேசியம் என்னும் ஒற்றைச் சொல்லாடலுடன் விடுதலைப்புலிகளின் நீட்சி எனும் தேர்தல்கால கோசத்தையும் தன்னகத்தே கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக தார்மீக ரீதியில் செயலாற்றுகிறதா? என்னும் ஐயம் எழுகிறது.

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுடனும் இந்தியாவின் ஆசீர்வாதத்துடனும் நீங்களும் சுமந்திரனும் தமிழ்த்தேசிய நீக்கம் செய்யும் நிகழ்ச்சி நிரலை மிகத்தெளிவாக நடைமுறைப்படுத்தி வருகிறீர்கள் என்பதை தற்போது எல்லோரும் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

சனநாயக ரீதியான அரசியலை எதிர் கொள்ளுதல் என்பது மதிநுட்ப ரீதியான இராஜதந்திர இராஜீக மூலோபாய தந்திரோபாய உபாயங்களை பயன்படுத்தியே ஆட்சியாளர்களை வசப்படுத்த வேண்டியதே சனநாயக மரபு சார் ஒழுங்கியல் நகர்வாகும். இதை அணுவளவும் தாங்கள் நகர்த்தவில்லை.

விடுதலைக்கு போராடிய இனம் விடுதலைக்கு எதிரான செயற்பாட்டில் இருந்த தாங்கள் தலைமையேற்றதே மிகப்பெரிய விடுதலைக்கான அரசியலின் பின்னடைவாகும் விடுதலைக்கான அரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை தாங்கள் கொண்டுள்ளீர்களா? என்னும் வாதமும் கருத்தியலாளர்கள் மத்தியில் உண்டு 2009 மே க்கு பின்னரான ஒன்பது ஆண்டுகளில் தாங்கள் சாதித்தது என்ன? மிகப்பெரிய சர்வதேச ஆதரவுத்தளத்தை முள்ளிவாய்க்கால் எனும் அரசின் இன அழிப்பு காணப்பட்டது.அந்த இடத்தில் இருந்து மிகத் தெளிவாக நகர்த்தியிருக்கலாம் ஆனால் தாங்கள் முன்னுக்குப்பின் முரனாகவே முள்ளிவாய்க்கால் இன அழிப்பை அணுகியதுண்டு.

புலிகளின் ஆணவமே தமிழ்மக்களுக்கு அழிவைத்தந்தது என பாராளுமன்றில் பேசிய தாங்கள் தங்களின் சர்வாதிகார தலைமைத்துவம்தமிழ்மக்களிற்கு எதைப் பெற்றுக் கொடுத்தது சற்று சிந்தியுங்கள்.

இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்த்தேசியம் மட்டுமல்ல தமிழ் மக்களும் காணமால் போய்விடுவார்கள் திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் கிழக்கில் எமது இருப்பை கணிசாமாக இழந்துவருகின்றோம். வடக்கிலும் அந்த நிலை பூதாகரமாகிவிட்டது.

தங்களிடம் எந்த நிகழ்ச்சி நிரலும் இருப்பதாக தெரியவில்லை கோசாங்களுக்கு அப்பால் இலட்சியம் இருக்கவில்லை குறைந்த பட்சம் உங்களுக்கு ஆலோசனை வழங்க சிந்தனைக்குளாம் கூட உருவாக்கவில்லை நானே ராசா நானே மந்திரி நானே மக்கள் இடையில் தமிழ்த்தேசிய நீக்கவாதி சுமந்திரன் எப்படி உருப்பெற முடியும் பாவம் அப்பாவித் தமிழ் மக்கள் கடந்த சனாதிபதித் தேர்தலுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கி மைத்திரிபாலசிறிசேனையை சனாதிபதியாக்கி தமிழ்மக்களுக்கு நீங்கள் பெற்றுக் கொடுத்த விமோசனம் என்ன?

விடுதலைக்குப் போராடிய இனத்தை சரணாகதியாக்கிய பெருமை உங்களையே சேரும் இது பெரும் வரலாற்று துரோகம் சிங்கள தலைவர்களை நீங்கள் இன்றும் புரிந்து கொள்ளாமல் ஐம்பது ஆண்டு காலம் அரசியலில் ஈடுபடுவது என்பது மிகவும் வேடிக்கையானது.

டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் இன்றைய மைத்திரிபால சிறிசேன வரை நாளை அப்புகாமி என்று ஒருவர் வந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள் சிங்கள இராஜ தந்திரம் பெரு வளர்ச்சி பெற்று தந்திரோபாயமாக எம்மை தொடர்ந்து வீழ்ச்சியுற வைக்கிறது என்பதை தங்களுக்கு புரியவில்லையா?அல்லது புரிந்தும் புரியாமல் உள்ளீர்களா?

இந்த ஆட்சி மாற்றத்தால் எதுவும் சாதிக்க மாட்டிர்கள் என்று 14.12.2014 அன்று தங்களுக்கு நான் கூறியிருந்தேன் ஆனால் அன்று எனது கருத்தை மறுத்தீர்கள் இன்று நடந்தது என்ன? சாதாரண எனக்கே புரிந்த விடயம் தங்களுக்கு புரியவில்லை என்பதே ஆச்சரியம் சிங்கள ஆட்சியாளர்கள் பற்றி குழந்தைப்பிள்ளைகக்கேபுரிந்த விடயம் தாங்கள் புரிய மறுப்பது வேடிக்கையானதே ஆட்சி மாற்றத்தில் தமிழ்த்தேசிய நீக்கம் நடைபெறும் என 03.01.2015 ஊடகவியலாளர் சந்திப்பில் நான் கூறியிருந்தேன் அதில் ஆட்சியாளர் பெரு வெற்றி கண்டுள்ளனர்.

இனப்பிரச்சனை தீர்வைப் பெறக்கூடிய மிகப்பெரிய பலமாக இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தற்போது தங்கள் ஆதரவுடன் நீர்ந்துப் போய்விட்டது.

காணாமல் போனோர் காணாமல் ஆக்கப்பட்டோர் ஒப்படைக்கப்பட்டோர் இவர்களுக்கு ஏதாவது முடிவு கண்டுள்ளீர்களா? அரசியல் கைதிகள் விவகாரமும் தொடர்கின்றது. புதிய அரசியல் அமைப்பு கொண்டு வருவோம் அதனூடாக தீர்வு கிட்டும் அதற்கு பிறகே ஏனைய சில்லறை விடயங்கள் என்று பல முறை கூறி பொங்கலுக்குள் தீர்வு தீபாவளிக்குள் தீர்வு என்று கூறி ஏமாற்றியதுடன் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்று மிகப்பெரிய பொய் சொன்னீர்கள் நடந்தது என்ன? ஊகத்தில் பேசுவது தலைமைக்குரிய பண்பல்ல.

புதிய அரசியல் அமைப்பு அதுவும் ஒற்றை ஆட்சிக்கு எந்த பங்கமும் இல்லாத அரசியல் அமைப்பைக் கூட கொண்டு வருவதற்கு கொழும்பு அரசியல் சூழல் சாதகமான நிலை இல்லை என்பது அரசியலை புரிந்த யாவருக்கும் நன்கு தெரிந்த விடயம் அரசியல் அமைப்பு உருவாக்க குழுவிடம் நான் அன்றே கூறியிருந்தேன் ஒரு போதும் இந்த அரசியல் அமைப்பு வராது என்று ஏன் ஏமாற்றுகிறீர்கள்? நீங்கள் அதிகம் நம்பும் அரசாங்கம் இதற்கு தயார் இல்லை சாதாரணமாக யாவருக்கும் புரிந்த விடயம்.

அரசில் அமைச்சராக இருக்கும் அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவில் உள்ள அமைச்சர் மனோகணேசனின் நேர்மையும் தைரியமும் கூட உங்களிடம் இல்லை. ஜெயலலிதா இல்லாத அ.திமு.க ஓ.பி.எஸ்சும் ஈபி எஸ்சும் டெல்லியின் அடிமைகளாக உள்ளது போல் நீங்களும் சுமந்திரனும் கொழும்பின் அடிமைகளாக இருந்து தமிழ் இனத்தையும் அடகு வைத்து விட்டிர்கள் இனியாவது சிந்தியுங்கள்!

உங்கள் அரச விசுவாசம் சர்வதேச ஆதரவையும் இழக்க செய்துவிட்டது நீங்கள் ஆளும் கட்சிக்குள் எதிர் கட்சிதானே உங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்து சாதித்தது என்ன? குறைந்தபட்சம் சிங்கள புத்திஜீவிகளுக்கும், பௌத்த மதகுருக்களுக்கும் முற்போக்கு கருத்தியலாளர்களுக்கும் இனப்பிரச்சினையின் அவசியம் தொடர்பாக அதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தி இருக்கலாம். செய்தீர்களா?

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்படவில்லை கூட்டமைப்பு தலைவராகவும் செயற்படவில்லை குறைந்தபட்சம் திருமலை பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்படவில்லை எனும் ஆதங்கம் சாதாரணமாக சகல தமிழ்மக்கள் மத்தியிலும் உள்ளது அதையே பிரதிபலிக்கின்றேன் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை அடுத்த தேர்தலுக்கு கொழும்பு தயாரகின்றது ஆகவே எனி எதுவும் நகர்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக அரிது

இவை எல்லாவற்றையும் விட நீங்கள் செய்த மிகப்பெரிய வரலாற்று தவறு எந்த அடிப்படையும் இல்லாத சரணாகதி அரசியலால் தமிழ்மக்களையும் கொழும்புடன் இணக்கமடைய வைத்துவிட்டிர்கள் அதற்கு சிறந்த உதாரணம் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் பல இடத்தில் 20 வீதமான வாக்குகூட பெறவில்லை தேசிய கட்சிகளுக்கு தமிழ்மக்களின் ஆதரவு போவதற்கு வழிவகுத்தது நீங்களே! தலைவர்கள்; அரசுடன் கூட்டுக்குடும்பம் நடத்தும் போது தொண்டர்கள் கள்ளக்காதல் கொள்வதில் என்ன தவறு எனும் மனோ நிலை காணப்படுகிறது. டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியலைமிஞ்சியது உங்கள் சரணகதி அரசியல்.

இந்த தேர்தல் பின்னடைவுபற்றி நீங்கள் இதுவரை ஆக்கபூர்வமாக சிந்தித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இனியாவது தமிழ்மக்களை ஐக்கியப்படுத்தாமல் பிரித்துவிட்டு எதிரி இலாபமடைய வழிவகுக்காதீர்கள்; உங்கள் இருப்பைப்பற்றி அக்கறை கொள்வதை விட்டு தமிழ்மக்களின் எதிர்காலம் பற்றி ஆக்கபூர்வதாக நடவடிக்கை எடுங்கள் எப்படி தந்தை செல்வா எல்லோரையும் ஐக்கியப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார் எனும் வரலாற்றை மீள் புதுப்பியுங்கள் தமிழர் தரப்பில் ஏட்டிக்கு போட்டி அரசியலுக்கு துலக்கமிடாதீர்கள் வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது.

நீங்கள் வாழ்வின் அந்திம காலத்திற்கு வந்துவிட்டிர்கள் இனியாவது இதயசுத்தியோடு செயலாற்றுங்கள். இது நல்லாட்சி இல்லை குள்ளாட்சி, ரணில் விக்கரமசிங்க கட்சிகளை ஒற்றுமையை சீர்குலைத்து தமிழ்த்தேசியத்தை நலிவுறச் செய்வதில் வெற்றி கண்டுவிட்டார். அதற்கு நீங்களும் சுமந்திரனும் அவரது முகவராக இருப்பது வாக்களித்த தமிழ்மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் ஆகும்.

எதிர்காலத்தில் வலிமையான தலைமைத்துவத்தை உருவாக்கத் தவிறிவிட்டீர்கள் நீங்கள் சந்தர்ப்பவவாத அரசியல் செய்கின்றீர்கள் கொழும்பில் ஒரு கதையும் வட கிழக்கில் இன்னொரு கதையும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் மற்றொரு கதையும் கூறி ஏமாற்றுகின்றீர்கள் பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக பங்காளி கட்சித் தலைவர்களும் பாரளுமன்ற உறுப்பினர்களும் ஓரங்க நாடகம் ஆடுகின்றார்கள். பாவம் தமிழ்மக்கள் உங்களை நம்பி நம்பியே ஏமாந்து விட்டார்கள். எவ்வித சலனமும் இன்றி அரசை ஆதரிக்கிறீர்கள் இதுதானா உங்கள் தேர்தல் அறிக்கை.

புலிகளின் தியாகத்தாலும் பொதுமக்களின் அர்ப்பணிப்பாலும் உருவான தமிழ்த் தேசியத்தை சிதைத்து சிங்களவனுக்கு விற்றுவிட்டிர்கள். உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? தமிழினத்தின் இருப்புக்கான எதிர்காலம் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லையா? தான் தான்தோன்றித்தனமாக தறிகெட்டு ஆடுகிறது தமிழர் அரசியல் ஆகவே இனியாவது அனைத்து தமிழ்தரப்பினையும், புத்திஜீவிகளையும் ஒருங்கினைத்து தமிழ்மக்களின் ஆபத்தான இருப்பு பற்றி விவாதியுங்கள் சர்வதேச ஆதரவையும் நாடுங்கள் உங்கள் ஆணவத்தையும் அகம் பாவத்தையும்; இனத்திற்காக சற்று விலக்கிவிடுங்கள் அல்லது வரலாறு உங்களை விலக்கிவிடும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

முயலுங்கள் முடியாவிட்டால் ஓய்வெடுங்கள் வெறுமைக்குள் தான் உங்கள் தலைமை என்பது வேதனையே.........
ஆகவே கீழ் பிரயிடலாளர்களாவது இந்தநிலையை மாற்ற அக்கறை கொள்வது அவசியமாகும்.

நன்றிகள்
இவ்வண்ணம்


வி.எஸ் சிவகரன்
தலைவர்
பொது அமைப்புக்களின் ஒன்றியம்
மன்னார் மாவட்டம்.


பிரதிகள்

01 கௌரவ சீ.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வடக்கு மாகாணம்)
02கௌரவமாவைசேனாதிராசா தலைவர் தமிழரசுக்கட்சி
03கௌரவசெல்வம் அடைக்கலநாதன் தலைவர் - ரெலோ
04கௌரவசித்தார்த்தன் தலைவர் - புளோட்
05கலாநிதி - இம்மானுவேல் ஆண்டகை மன்னார்
06 கலாநிதி - ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை யாழ்ப்பாணம்
07 கலாநிதி - நோயல் இம்மானுவேல் ஆண்டகை திருகோணமலை
08 கலாநிதி - யோசப்பொன்னையா ஆண்டகை மட்டக்களப்பு