யாழ்.பல்கலைக்கழகத்திற்கான பேரவை உறுப்பினர்கள் நியமனம்
யாழ்.பல்கலைக்கழகத்திற்கான பேரவை உறுப்பின ர்கள் 14 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணை க்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த பேரவை உறுப்பினர்கள் தெரிவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் அதியுயர் சபையாக கருதப்படும் பேரவையில், உள்வாரி உறுப்பினர்களாக இருக்கும் துணைவேந்தர், பீடாதிபதிகள், மூதவை பிரதிநிதிகள் உள்ளிட்ட புலமையாளர்களுடன், வெளிச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சமூகத்தில் மதிப்பார்ந்த சேவையை வழங்கிவரும் கல்வி, தொழில்சார், வணிக, கைத்தொழிற்றுறை, விஞ்ஞான மற்றும் நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கப்படவேண்டும் என்ற, 1985ம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தின் 44 (1) 7 பிரிவின்படி வெளிவாரி உறுப்பினர்கள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த அரசின் காலத்தில் இருந்த பேரவை பல எதிர்ப்புக்களிற்கு மத்தியில் கலைக்கப்பட்டு புதிய பேரவை புதிய அரசின் காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட பதின்நான்கு உறுப்பினர்களும் வருமாறு,
பேராசிரியர் சிற்றம்பலம், பேராசிரியர் தர்மரத்தினம், வைத்திய நிபுணர் லக்ஸ்மன், வைத்திய நிபுணர் ஜெயக்குமார், பொறியலாளர் விக்னேஸ்வரன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், முன்னாள் அரச அதிபர் நேசையா, யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன், பேராசிரியர் ரட்னாயக்க, பேராசிரியர் கிஸ்புல்லா, கணபதிப்பிள்ளை, சிவசேகரம், மனோசெகரம், முன்னாள் பிரதம செயலாளர் ரங்கராயன் ஆகியோரே பேரவை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பதின்நான்கு பேருக்குமான நியமனக்கடிதங்கள் நேற்று முன் தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.