அடிப்படை வசதிகளற்ற நிலையில் கல்வியை தொடரும் வலி. வடக்கு மாணவர்கள்
வலி.வடக்கில் வீமன்காமம் பகுதியில் மீள்குடியேறிய மாணவர்கள், அங்கு போதிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும், தமது முயற்சியை கைவிடாது கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வலி.வடக்கில் வீமன்காமம் பகுதியில் வசித்த மக்கள் கடந்த 1990ம் ஆண்டு ஜூலை மாதம் யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். கடந்த 25 வருடகாலமாக உறவினர்கள் வீடுகள், வாடகை வீடுகள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த அப்பகுதி மக்கள் 25 வருடங்களின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற அனுமதிக்கபட்டுள்ளனர்.
அதனை அடுத்து அப்பகுதியில் மக்கள் மீள் குடியேறிய போதிலும் அவர்களுக்கான போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் அப்பகுதியில் குடியேறியுள்ள மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றார்கள்.
வீமன்காமம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஒன்றிணைந்து மாலை நேரங்களில் ஒரு குடிசை வீட்டின் முற்றத்தில் இருந்து பாடசாலையில் கற்றவற்றை மீள கற்று வருகின்றார்கள். இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தால் இவ்வாறு மாலை வேளைகளில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.